ஹிட் கொடுத்தாலும் தெலுங்கில் வாய்ப்பு கிடைக்கவில்லை.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதங்கம்
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துவருகிறார். முக்கியமாக ஹீரோயின்களை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் அவர் காலடி எடுத்து வைத்து பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
மானாட மயிலாட நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆன பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர்களும் இவர்களும் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர் தொடர்ந்து உயர்திரு 420, சட்டப்படி குற்றம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிறகு பா.இரஞ்சித் இயக்குநராக அறிமுகமான அட்டகத்தி படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

முன்னணி நடிகை: அந்தப் படத்துக்கு பிறகு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக மணிகண்டன் இயக்கத்தில் அவர் நடித்த காக்கா முட்டை படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் சினிமாவில் வளர்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் இரு குழந்தைகளுக்கு தாயாக அவர் நடித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
முன்னணி நடிகை: திறமையான நடிகையான அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தர்மதுரை, குற்றமே தண்டனை, லட்சுமி, வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். முக்கியமாக வடசென்னை படம் அவருக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. தற்போது அவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, ஃபர்ஹானா ஆகிய படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை.
மலையாளத்தில் ஐஸ்வர்யா: இந்த சூழலில் அவர் மலையாள திரையுலகிலும் புலிமடா படத்தின் மூலம் அறிமுகமானார். ஜோஜு ஜார்ஜ் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே மலையாளத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு ரவுண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தெலுங்கிலும் பிஸியான நடிகையாக வலம் அவர் கடைசியாக அந்த மொழியில் சங்கராந்தி வஸ்துனானு படத்தில் நடித்திருந்தார். மேலும் அவரது நடிப்பில் கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்கள் தமிழில் ரிலீஸாகவிருக்கின்றன.
ஐஸ்வர்யா பேட்டி: இந்நிலையில் அவர் கொடுத்த சமீபத்திய பேட்டி ஒன்றில், "தெலுங்கில் நான் நடித்த சங்கராந்தி வஸ்துனானு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் அதற்கு பிறகு எனக்கு ஒரு தெலுங்கு பட வாய்ப்புகூட கிடைக்கவில்லை. எனக்கு வாய்ப்பு வழங்க தெலுங்கு திரையுலகினரும், மக்களும் கால அவகாசம் எடுத்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். முக்கியமாக நான் கமர்ஷியல் ரக ஹீரோயின் இல்லை. அதனால்தான் எனக்கு வாய்ப்புகள் நிறைய கிடைக்கவில்லையோ என தோன்றுகிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











