இந்தியாவின் பெரிய நடிகைகள் எல்லாம் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களே: வித்யா பாலன்
மும்பை: இந்தியாவின் பெரிய நடிகைகள் அனைவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான் என்று வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் வித்யா பாலன். தற்போது இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் தனக்கென ஒரு ஸ்டைல் வைத்துள்ளார்.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர் படம் அவருக்கு பெயரும், புகழும் அளித்தது.

பெரிய நடிகைகள் எல்லாம்
இந்தியாவின் பெரிய நடிகைகள் அனைவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். வைஜெயந்தி மாலா, ஹேமமாலினி, ரேகா, ஸ்ரீதேவி, ஜெயபிரதா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் திரையிலும், வெளியிலும் சுதந்திரம் பெற்றவர்களாக உள்ளார்கள் என்றார் வித்யா.

வாவ், ஸ்ரீதேவி
கேமரா முன் வந்ததுமே ஸ்ரீதேவிக்கு என்ன தான் நடக்கிறது என்று வித்யா வியந்துள்ளார். மேலும் ஸ்ரீதேவி நடிக்கும் படத்தில் சிறு உதவியாளராகக் கூட வேலை பார்க்க அவர் தயாராக உள்ளார்.

என் அழகை நானே
டர்ட்டி பிக்சர் படத்திற்கு பிறகு பூசினாற் போன்ற எனது தோற்றத்தை நானே ரசிக்க ஆரம்பித்தேன். ஒல்லியான பெண்கள் தசை தூக்கலாக, ஆண்மைத்தனமாக தெரிவார்கள். அவ்வாறு ஆண்மைத் தனமாக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை என்று வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

அடுத்தவர் மனைவியை ரசிக்கிறார்கள்
முன்பு ரசிகர்கள் அடுத்தவர்களின் மனைவியை ரசிக்க மாட்டார்கள். ஆனால் தற்போது திருமணத்திற்கு வெளியிலான உறவுகள் அதிகரித்து வரும் நிலையில் திருமணமான பெண்ணை ஆசையோடு பார்க்க பலர் தயங்குவதில்லை என்றார் வித்யா.


Click it and Unblock the Notifications











