17 வயதில் நடித்த படத்தால் சர்ச்சை.. இயக்குநரை நம்பி ஏமாந்தேன்.. நடிகை அமலா பால் ஓப்பன் டாக்
சென்னை: வீரசேகரன் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் அமலாபால். அதன் பிறகு விஜய், விக்ரம் படங்களில் நடித்து பிரபலம் ஆனார். தனது வாழ்வில் பல சோதனைகளை தாண்டி தற்போது குடும்பத்துடன் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அமலா பால் தனது 17 வயதில் எடுத்த விபரீதமான முடிவு பற்றி குறித்து பேசியிருக்கிறார். அதில் அவரது வாழ்வை எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்பது பற்றி மிகவும் வேதனையுடன் தெரிவித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை அமலா பால் தனது நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இலை என்ற ஆண் குழந்தை இருக்கிறது. அமலா பால் தனது குழந்தையுடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றிருந்த வீடியோ இணையத்தில் வைரலானது. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் தனது குழந்தையுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து விளையாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அமலா பால் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது 17 வயதில் நடந்த மிக மோசமான அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.

சிந்து சமவெளி: வீரசேகரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனாலும், சிந்து சமவெளி படம் அவரை மிகப்பெரிய சர்ச்சையில் சிக்க வைத்தது. இப்படத்தில் மாமனாருக்கும் மருமகளுக்கும் இருக்கும் தவறான உறவை பற்றி பேசிய படமாக இருந்தது. இதில், ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியான போது பெரும் சர்ச்சையானது. அமலா பாலின் கேரக்டரையும் தவறாக சித்தரித்து செய்திகளும் வெளியாகின. இந்நிலையில், சிந்து சமவெளி படத்தால், பல துன்பங்களை அடைந்ததாகவும், தனது குடும்பம் அடைந்த மனவேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என அமலா பால் தெரிவித்திருக்கிறார்.
17 வயதில் விபரீத முடிவு: சிந்து சமவெளி படத்தில் நடித்ததை நினைத்து என்னை விட என் அப்பா மிகவும் வேதனை அடைந்தார். அப்படத்திற்கு எதிராக வந்த விமர்சனங்கள் எனக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை தந்தன. பலரும் பலவிதமாக தாக்கி பேசியதை ஏற்கமுடியவில்லை. அதனால் நான் கேரளாவில் இருந்து சென்னை வரவே அஞ்சினேன் என அமலா பால் கூறியுள்ளார். சிந்து சமவெளி படத்தில் நடித்த போது எனக்கு வயது 17. அந்த சிறு வயதில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை. முழுக்க முழுக்க இயக்குநர் பேச்சை நம்பிதான் நடித்தேன். ஆனால், இவ்வளவு பெரிய அசிங்கத்தை ஏற்படுத்தி தந்ததை மறக்க முடியாது. இதனால், என் சினிமா கரியரையும் பாதித்தது.

பிரபலங்கள் அழைப்பு: சிந்து சமவெளி படத்தால் எழுந்த சர்ச்சையால் மைனா படத்தின் புரோமோஷன் விழாவிற்கு கூட போக முடியாமல் தவித்தேன். நான் வந்தால் சர்ச்சையாகும் என்பதால் படக்குழுவினரும் மைனா பட விழாவிற்கு அழைக்கவில்லை. அப்போது, நடிகர்கள் ரஜினிகாந், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களும் எனக்கு போன் செய்து ஆறுதல் தெரிவித்ததாக அமலா பால் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து மைனா படத்தின் வெற்றிக்கு பிறகு எனக்கு ஏற்பட்ட அவமானத்தை தாண்டி வெற்றி பெற்றேன். இதன் பிறகு தலைவா, தெய்வத்திருமகள் போன்ற படங்கள் நடிகைக்கான அங்கீகாரத்தை வழங்கியது என அமலா பால் தெரிவித்துள்ளார்.

அப்போதுதான் புரிந்துகொண்டேன் சினிமா ஒரு வியாபாரம், அதற்காக பெண்ணை எப்படி வேண்டும் என்றாலும் பயன்படுத்துவார்கள். அந்த அடியில் இருந்து விழுந்து மீண்டும் எழுந்தேன் என தெரிவித்தார். அமலா பால் கடைசியாக தமிழில் நடித்த ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்ததும் சர்ச்சையானது. ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











