வடசென்னைக்காக மீனவ பெண்ணாக மாறும் அமலாபால்
சென்னை: வடசென்னை படத்தில் மீனவப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதால், மீனவப் பெண்களின் பேச்சு மொழியை அமலா பால் பேசி கற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணை படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வடசென்னை. தனுஷ், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்தை தனுஷ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

கதாநாயகியாக முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்ட சமந்தா விலகிவிட்டதால், அமலாபால் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
வடசென்னை' 3 பாகங்களாக வரவிருக்கிறது. இதில் 3 பாகங்களிலும் நாயகி அமலா பால் கதாபாத்திரம் வருவது போன்று வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.
ஏ.எல்.விஜய் உடனான விவாகரத்துக்கு பிரச்சினைக்குப் பின்னர் சினிமாவில் முழுமூச்சாக கவனம் செலுத்தி வருகிறார் அமலாபால்.
வடசென்னையில் மீனவப் பெண் கதாபாத்திரம், 3 பாகங்களிலும் வரும் கதாபாத்திரம் என்பதால் மீனவப் பெண்களுடைய பேச்சு மொழியை கற்றுக் கொண்டு நடித்து வருகிறார் அமலாபால்.
இப்படத்துக்காக சென்னை மத்திய சிறைச்சாலையை அரங்கமாக அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். முதல் பாகத்துக்கான பெரும்பகுதி படப்பிடிப்பு இந்த அரங்கில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் கதைக்களம் 40 ஆண்டுகளை உள்ளடக்கியது என்பதால் மொத்த படக்குழுவுமே கடுமையாக உழைத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











