அம்பானி வீட்டு திருமணம்.. கலந்துகொண்ட பிரபலங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா?.. நடிகை கொடுத்த விளக்கம்
சென்னை: இந்தியாவின் தலைப்பு செய்திகளில் ஒன்றாக மாறியிருந்தது முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த் அம்பானியின் திருமணம். ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை காதலித்துவந்த அவர்; வீட்டு சம்மதத்துடன் அவரை திருமணம் செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்தத் திருமண விழாவில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லீ உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இந்தச் சூழலில் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
உலக பணக்காரர்களில் ஒருவரான அம்பானிக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு திருமணம் முடிந்திருக்கும் சூழலில்; இளைய மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை காதலித்துவந்தார். ராதிகாவும் மும்பையை சேர்ந்த கோடீஸ்வர வீட்டு பெண். அவர் மருத்துவ துறையில் பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரது காதலுக்கும் இரண்டு பேரின் வீட்டாரும் உடனடியாக சம்மதம் தெரிவித்தனர். அதனையடுத்து ஆனந்த் - ராதிகாவின் திருமணம் முடிவு செய்யப்பட்டது.

கோலாகல கொண்டாட்டம்: திருமணம் முடிவானதும் இந்தியாவிலும், பிரான்ஸிலிருந்து இத்தாலிவரை செல்லும் ஒரு சொகுசு கப்பலிலும் ப்ரீ வெட்டிங் நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன. ப்ரீ வெட்டிங்கிற்கே சொகுசு கப்பலா என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்தியாவில் நடந்த ப்ரீ வெட்டிங் நிகழ்வும் கோலாகலமாகவே கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்துகொண்டார்.
மூன்று நாட்கள் திருமணம்: அதனையடுத்து ஆனந்த் அம்பானியின் திருமணம் மூன்று நாட்கள் நடத்தப்பட திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஜூலை மாதத்தில் மங்கல் உத்சவ் நிகழ்வு நடைபெற்றது. இதில் உலக விஐபிக்கள் முதல் உள்ளூர் விஐபிக்கள்வரை கலந்துகொண்டார்கள். தமிழ் சினிமாவிலிருந்து ரஜினிகாந்த், விக்னேஷ் சிவன், நயன்தாரா உள்ளிட்டோர் குடும்ப சகிதமாக கலந்துகொண்டார்கள்.
வாட்ச் கிஃப்ட்: மேலும் பாலிவுட் திரையுலகமும் திரண்டு சென்று கலந்துகொண்டது. இந்தத் திருமண விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புடைய கை கடிகாரத்தை முகேஷ் அம்பானி பரிசாக வழங்கினார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்து போயினர். மேலும் ரஜினிகாந்த்தோ நடனம் எல்லாம் ஆடி அமர்க்களப்படுத்தினார். சூழல் இப்படி இருக்க திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு வாட்ச் மட்டுமின்றி பணமும் வழங்கப்பட்டதாக ஒரு தகவல் ஓடியது.
அனன்யா பாண்டே விளக்கம்: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை அனன்யா பாண்டே கூறுகையில், "ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பணம் கொடுத்தார்கள் ஏன் மக்கள் நினைக்கிறார்கள் என தெரியவில்லை. ஆனந்த் அம்பானி, ராதிகா எனது நண்பர்கள். எனது நண்பர்களின் திருமணத்தில் நான் அப்படித்தான் நடனம் ஆடுவேன். ஆனந்த்தும், ராதிகாவும் ஒருவரையொருவர் பார்த்த பார்வையில் காதல் மட்டும்தான் இருந்தது.
ஆசையாக இருந்தது: அந்தக் காதலையும், திருமணம் நடந்த முறையையும் நான் பார்த்தபோது நமக்கும் இப்படி நடக்க வேண்டும் என்ற ஆசைதான் எனக்கு இருந்தது. எங்களை அங்கு அவ்வளவு அழகாக உபசரித்தார்கள். பல நிகழ்ச்சிகள் நடந்தன. இருந்தாலும் திருமணத்தில் கலந்துகொண்டவர்களை அம்பானி குடும்பத்தினர் அன்போடு வரவேற்றார்கள். அது நல்ல குணமாகும்" என்றார்.


Click it and Unblock the Notifications











