மாஸ்க் படத்துக்காக ரிஸ்க் எடுத்த ஆண்ட்ரியா.. வீடு அடமானத்தில் இருக்காம்.. என்ன நடக்கப்போகுதோ?
சென்னை: தமிழ் திரைத்துறையில் பாடகியாக உள்ளே வந்த ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகையாக மாறினார். அதிலிருந்து தொடர்ந்து நடித்துவரும் அவர் பாடல்கள் பாடுவதிலும் பிஸியாகவே இருக்கிறார். இந்தச் சூழலில் மாஸ்க் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் அவர். அந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கவின் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமானவர்தான் ஆண்ட்ரியா. ஆனால் கௌதம் மேனன் அவரை பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகையாக மாற்றிவிட்டார். அந்தப் படத்தில் அவரது நடிப்புக்கு கிடைத்த ரெஸ்பான்ஸை அடுத்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் என முழுநேர நடிகையாக மாறிவிட்டார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் அன்னையும் ரசூலும் உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல பெயரை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
வடசென்னை சந்திரா: நடிப்பு அவருக்கு கைகொடுத்தாலும் தனது ஆணி வேரான பாடல்கள் பாடுவதை விடவில்லை. ஒருபக்கம் நடிப்பு மறுபக்கம் ரெக்கார்டிங் ஸ்டூடியோ என பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியாக லைஃப் டைம் கேரக்டர் என்றால் வடசென்னை சந்திராதான். படத்தின் மிக மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று கலக்கியிருந்தார்.அந்தப் படம் கொடுத்த மெகா ரெஸ்பான்ஸ் அவரை நடிப்பு பயணத்தில் அடுத்தக்கட்டத்துக்கு அழைத்து செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

டல்லடித்த வாய்ப்புகள்: ஆனால் அவர் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அதிகம் வராமல் குறைந்தே போயின. அது அனைவருக்குமே ஆச்சரியத்தைத்தான் கொடுத்தன. நடிகை, பாடகி என மட்டும் இருந்த ஆண்ட்ரியா இப்போது மாஸ்க் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். கவின் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தை ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து வெற்றிமாறனும் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாளை படம் ரிலீஸ்: படமானது நாளை ரிலீஸாகவிருக்கிறது. முதன்முறையாக இப்படத்தில் ஆண்ட்ரியா தயாரிப்பாளராக மாறியிருப்பதால் ரொம்பவே எக்சைட்மென்ட்டாக இருக்கிறார். இந்தப் படத்தின் கதை அதன் இயக்குநர் விகர்ணன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம். இதில் ஆண்ட்ரியா வில்லியாக நடித்திருப்பதாக ட்ரெய்லரை பார்க்கையில் தெரிகிறது. இந்நிலையில் இப்படத்துக்கான ப்ரோமோஷனில் தீவிரமாக கலந்துகொண்ட அவர் பேசியிருக்கும் விஷயம் ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஆண்ட்ரியா பேச்சு: ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்தப் படத்தை தயாரிப்பதற்காக நான் என்னுடைய வீடு பேரில் லோன் வாங்கியிருக்கிறேன். அந்த வீடு வாங்குவதற்கான பணம் படத்தில் நடித்ததால்தான் வந்தது. அந்தப் பணத்தைத்தான் மீண்டும் நான் சினிமாவிலேயே போட்டிருக்கிறேன்" என்றார். இதை பார்த்த ரசிகர்கள் முதல் பட தயாரிப்புக்காக வீட்டையே அடமானம் வைத்து லோன் எடுத்திருக்கிறார். என்ன நடக்கப்போகுதோ என்று கேள்வி எழுப்பிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











