ஹேமா கமிட்டி ரிப்போர்ட்.. நோ கமெண்ட்ஸ்.. நழுவி சென்ற ஆண்ட்ரியா.. ரசிகர்கள் அதிருப்தி
சென்னை: இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது ஹேமா கமிஷன் அறிக்கை. மலையாள திரையுலகில் நடிகைகள் முதல் பெண் ஊழியர்கள்வரை நடைபெறும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஹேமா கமிஷனின் அறிக்கையில் இருக்கும் அம்சங்கள் வெளியாகியிருக்கின்றன. அதன் காரணமாக கேரள திரையுலகில் பெரும் புயல் வீசிவருகிறது. இந்தச் சூழலில் ஆண்ட்ரியாவிடம் ஹேமா கமிட்டி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகை ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு ஷூட்டிங்கை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்கள் சிலர். அந்த விவகாரத்தில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அதேபோல் சுனி என்பவரும் சைது செய்யப்பட்டார். அந்த விவகாரம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேமா கமிஷன்: இந்த விவகாரத்தை அடுத்து மலையாள திரையுலகில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது ; அவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என்று மலையாள திரையுலகிலிருந்து சில நடிகைகள் கோரிக்கையை முன் வைத்தார்கள்.அதனை ஏற்றுக்கொண்ட அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு கமிஷனை அமைத்தார்.
அந்த கமிஷனில் ஹேமா தவிர்த்து நடிகை சாரதா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வல்சலகுமாரி ஆகியோரும் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் தீவிரமாக விசாரித்து தங்களது அறிக்கையை 2019ஆம் ஆண்டு முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர். ஆனால் அந்த அறிக்கையில் என்னவிருந்தது என்பது வெளியிடப்படாமலேயே இருந்தது. அதற்கு காரணம் பலர் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் நடந்த விஷயங்களை கூறியிருப்பதாக கூறப்பட்டது. அதேசமயம் அந்த விஷயத்தை தவிர்த்து பிற விஷயங்களை வெளியிட வேண்டும் என்று தகவல் உரிமை ஆணையம் தெரிவித்திருந்தது.
தள்ளுபடி செய்த நீதிமன்றம்: ஆனால் ஹேமா கமிஷன் அறிக்கையை வெளியிடவேக்கூடாது என்று தயாரிப்பாளர் ஒருவர் கேரளாவில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒருவரின் தனியுரிமையை பாதிக்காத வண்ணம் அறிக்கையை வெளியிடலாம் என்று தகவல் உரிமை ஆணையம் கூறியிருப்பதை குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது. இந்தச் சூழலில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேரளாவை சேர்ந்த 5 பேர் ஹேமா கமிஷன் அறிக்கையை பெற்று வெளியிட்டிருக்கிறார்கள். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
மோகன் லால் ராஜினாமா: மேலும் இந்த விஷயத்தில் மௌனம் காத்த மோகன் லால் AMMA அமைப்பின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதேசமயம் அவர் மீதும் பெரிதாக நல்ல அபிப்ராயம் பல நடிகைகளிடம் இல்லை என்பதே பரவலான கருத்தாக இருக்கிறது. இதற்கிடையே குற்றஞ்சாட்டப்பட்ட ரஞ்சித், சித்திக் உள்ளிட்டோர் மீது காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நழுவிய ஆண்ட்ரியா: ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டின் தாக்கம் தமிழ் சினிமாவில் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது. தமிழ் நடிகர்கள், நடிகைகளிடம் இதுகுறித்து தொடர்ந்து கேள்விகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியாவிடம் இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள், அதற்கு அவரோ, ஹேமா கமிட்டி ரிப்போர்ட் குறித்து என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். அதற்கு பதில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை என்று முடித்துக்கொண்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படியா ஆண்ட்ரியா நழுவி போவது என்று அதிருப்தியுடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். முன்னதாக ரஜினிகாந்த்திடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது அதுகுறித்து தனக்கு தெரியாது என்று பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











