தாவணிதான் தர்றாங்க... - கபடி ஆட்டத்தில் அஞ்சலி கலகல!
பைரவா கிரியேஷன்ஸ் மற்றும் ஜெயம் விஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த கபடிப்போட்டி சுவையான ரியாலிடி ஷோவாக வாரம் இருமுறை ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட இருக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பெண்கள் கபடி அணியினர் அஞ்சலியை பார்த்ததும் மேலும் உற்சாகமாக விளையாட ஆரம்பித்தார்கள். சிலர் அஞ்சலியின் கையை பிடித்து கபடி ஆட அழைத்ததும் சற்றே பயந்தபடி களத்தில் இறங்கினார் அஞ்சலி. ஆனால் அவரை பிடிக்கவோ தொடவோ எந்த வீராங்கனையும் முன்வரவில்லை. அவர்களின் ஒரே சந்தோஷம், 'பிரபலமான அவ்வளவு பெரிய நடிகை நம்முடன் விளையாட சம்மதித்து கிரவுண்டில் இறங்கினாரே,' என்பது மட்டும்தான்.
இங்கும் அங்கும் "கபடி கபடி" என்று பாடியபடியே நாலுமுறை நடப்பதற்குள் மூச்சு வாங்கிய அஞ்சலி, 'ஆளை விடுங்க பொண்ணுங்களா' என்றபடி ஓடிப்போய் சேரில் அமர்ந்து கொண்டார். ஆனால் விளையாட்டில் ரொம்பவே ஆர்வம் காட்டிய அஞ்சலி ஒரு நாள் முழுக்க கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மைதானத்தில் அமர்ந்திருந்தது ஆச்சர்யம்.
ஒவ்வொரு கபடி வீராங்கனையையும் தனித்தனியாக அவர் உற்சாகப்படுத்தியதோடு அவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். 'எங்கேயும் எப்போதும்' படத்தில் கடுகடுன்னு இருந்தீங்க. ஆனால் நேரில் பார்க்கும்போது மலர்ச்சியா இருக்கீங்க. இனிமே அது மாதிரி ரோலில் நடிக்காதீங்க என்று அட்வைஸ் செய்தார் ஒரு கபடி பிளேயர். இன்னொரு பெண்ணோ எல்லா படத்திலேயும் பாவாடை தாவணி, சுரிதார்னு ஒரே மாதிரி காஸ்ட்யூம்ல வர்றீங்க. கொஞ்சம் கவர்ச்சியாகவும், மாடர்னாகவும் டிரஸ் பண்ணலாமே என்றார்.
இதற்கு பதிலளித்த அஞ்சலி, கதைப்படி எனக்கு என்ன ரோலோ, அது மாதிரிதான் என்னோட காஸ்ட்யூமும் இருக்கும். இதையெல்லாம் நான் முடிவு பண்ணுறதில்ல. என்னோட டைரக்டர்தான் முடிவு பண்ணுவார் என்று பதிலளித்தார்.
கூட்டத்தை கலகலப்பாக்க இந்த நிகழ்ச்சிக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இசையமைப்பாளர் தேவாவின் கானா பாடல் ஒலிபரப்பப்பட்டது. அக்கா, வாங்க ஆடலாம் என்று கபடி வீராங்கனைகள் அஞ்சலியை அழைக்க, அந்த பாடலுக்கு சரியான குத்தாட்டம் போட்டார்கள் அஞ்சலியும் கபடிப் பெண்களும். அஞ்சலி ஆட ஆரம்பித்ததும் திரண்டிருந்த சுமார் நாலாயிரம் பேரும் இவர்களுடன் சேர்ந்து ஆடியது ஒரே கோலாகலமாக இருந்தது.
நீலகிரி அணியை சேர்ந்த கபடி வீராங்கனை ருக்குமணிக்கு அன்றைய தினம் பிறந்த நாள் என்று அறிந்ததும் தனது செலவில் கேக் வரவழைத்து அதிரடியாக அந்த கிரவுண்டிலேயே அந்த பிளேயரின் பிறந்த நாளை கொண்டாடியதை கண்ட மக்கள் அஞ்சலியின் எளிமையை பாராட்டி கைதட்டி மகிழ்ந்தார்கள்.
இறுதியாக வெற்றி பெறும் அணிக்கு தரப்படவிருக்கும் ஜெய்சக்ரா பரிசுக் கோப்பையை வியந்து நோக்கிய அஞ்சலி, யம்மாடி எவ்ளோ பெரிய கோப்பை? இதை பார்த்தாலே சீரியசாக களத்தில் இறங்கி கபடி ஆடணும் போல இருக்கு என்று கூறியதுதான் ஹைலைட்!
சிறு வயதில் பலமுறை கபடி விளையாடி இருக்கிறாராம் அஞ்சலி. அதன் காரணமாகதான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே சம்மதித்ததாகவும் குறிப்பிட்டார் அழகுப்பெண் அஞ்சலி.


Click it and Unblock the Notifications












