என் ஷூட்டிங்கைத் தடுக்க யாராலும் முடியாது! - களஞ்சியத்துக்கு அஞ்சலி பதில்
ஹைதராபாத்: என்னை வைத்து படம் தயாரிக்க விரும்புபவர்கள் கவலைப்பட வேண்டாம். என் ஷூட்டிங்கை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறியுள்ளார் நடிகை அஞ்சலி.
என் படத்தில் நடிக்கும் வரை, யார் படத்திலும் அஞ்சலியை நடிக்கவிடமாட்டேன் என்று இயக்குநர் மு களஞ்சியம் நேற்று முன்தினம் மிரட்டும் தொனியில் பேட்டி அளித்திருந்தார்.
இது மீடியாவில் வெளியானதும், அதற்கு பதிலடியாக நேற்று மாலை அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை அஞ்சலி.

அந்த அறிக்கை:
என் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. நான் ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பை எந்த பிரச்சினையும் இல்லாமல் முடித்துவிட்டேன். அடுத்து, புனித் ராஜ்குமாருடன், நான் ஒரு கன்னட படத்தில் நடிக்கிறேன். அந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது.

தடுக்க முடியாது
நடிப்பது என் தொழில். நான் படப்பிடிப்புக்கு சென்றால், என்னை தடுத்து நிறுத்தப்போவதாக யாரோ ஒருவர் கூறுவதாக கேள்விப்பட்டேன். என்னை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது.

ஆதரவு
நான் எந்த தவறும் செய்யாதவள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் எனக்கு எல்லோரும் ஆதரவாக இருக்கிறார்கள்.

முழு ஒத்துழைப்பு
என்னை வைத்து படம் தயாரிக்க விரும்புபவர்கள் கவலைப்படவேண்டாம். நான் என் தொழிலில் முழுமையான ஈடுபாடுடன் இருப்பேன்.
இவ்வாறு அஞ்சலி அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ஊர்சுற்றிப் புராணம்
அஞ்சலியை வைத்து சில ஆண்டுகளுக்கு முன் ஊர் சுற்றிப் புராணம் என்ற பெயரில் ஒரு படம் ஆரம்பித்தார் களஞ்சியம். ஆனால் அந்தப் படம் பின்னர் வளரவில்லை. மேலும், சித்தி பாரதிதேவியுடன் சேர்ந்து, மு களஞ்சியம் தன் சொத்துக்களை அபகரிக்க முயன்றதாக குற்றம்சாட்டினார் அஞ்சலி. இதைத் தொடர்ந்து ஹைதராபாத் போன அஞ்சலி, அதன் பிறகு சென்னைக்கு வரவே இல்லை.


Click it and Unblock the Notifications











