வானம் படத்தில் விலைமாது வேடம் எதற்காக?.. ஓபனாக பேசிய நடிகை அனுஷ்கா
ஹைதராபாத்: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படு ஃபேமஸாக வலம் வந்தவர் அனுஷ்கா. அழகு மட்டுமின்றி திறமையும் கொண்டிருந்த அவர் சில வருடங்கள் கோலிவுட்டையும், டோலிவுட்டையும் சேர்த்தே ரூல் செய்துகொண்டிருந்தார். ஆனால் திடீரென அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் சூழலில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
யோகா டீச்சரான அனுஷ்கா நாகார்ஜுனா நடித்த சூப்பர் என்ற படத்தில் அறிமுகமானார். கிளாமர், திறமை, அழகு என அனைத்தும் பொருந்திய நடிகையாக அந்த படத்தில் வலம் வந்த அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அப்படி அவர் நடித்த படங்களில் அருந்ததி படம் மெகா ஹிட்டானது. பேய் கதை ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படத்தில் அனுஷ்காவின் நடிப்பை பார்த்த பலரும் வாயடைத்துப்போனார்கள். இதனால் ஃபேமஸ் ஆக ஆரம்பித்துவிட்டார்.

தமிழில் அறிமுகம்: சூழல் இப்படி இருக்க சுந்தர்.சி இயக்கத்தில் ரெண்டு படத்தில் தமிழில் அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் அனுஷ்காவின் அலை கோலிவுட்டிலும் அடிக்க ஆரம்பித்தது. அதன்படி வேட்டைக்காரன், சிங்கம், இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால் என பல படங்களில் நடித்தார். முக்கியமாக பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் கொண்டு சேர்த்தது. பாகுபலியின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அனுஷ்காவின் கரியர் மேற்கொண்டு உச்சம் சென்றது.
இஞ்சி இடுப்பழகி: அப்படி உச்சத்தில் இருக்கும்போதுதான் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையை கூட்டினார். படம் படுதோல்வியடைந்தது. மேலும் ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியாமலும் தடுமாறினார் அனு. இதன் காரணமாக அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து ஒருகட்டத்தில் ஆளே காணாமல் போனார். இருந்தாலும் அனுஷ்கா மீதான கிரேஸ் ரசிகர்களுக்கு இன்னமும் அப்படியேத்தான் இருக்கிறது. இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் அவர்.
அனுஷ்கா பேட்டி: இந்நிலையில் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேசிய அனுஷ்கா, "தைரியம் என்பது நீங்கள் எடுக்கும் சோதனை முயற்சிகளில்தான் கிடைக்கும். என்னுடைய கரியரில் நல்வாய்ப்பாக அதுபோன்ற கதைகளில் நடித்திருக்கிறேன். அருந்ததி படத்துக்கு பிறகு நான் ஒரு விலைமாதுவாக வானம் படத்தில் நடித்தேன். உடனே பலரும், அருந்ததி மாதிரியான படத்தில் நடித்துவிட்டு இப்படிப்பட்ட ரோலில் ஏன் நடிக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
பிடித்திருந்தது: ஆனால் எனக்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. அதனால்தான் அந்தப் படத்தில் நடித்தேன். எனக்கு ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று இதயப்பூர்வமாக தோன்றிவிட்டால் அது எனக்குள் லாக் ஆகிவிடும். அதில் கிடைப்பது லாபமாக இருந்தாலும், நஷ்டமாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருப்பேன். மேலும் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிப்பது ரிஸ்க் என்று சொன்னார்கள். ஆனால் அந்தக் கதையும் எனக்கு பிடித்திருந்தது. எனவே நடித்தேன். நமக்கு பிடித்த கதைகளில் நடிக்காமல் போனால் திரைத்துறையில் எதற்காக இருக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications