பாட்டு பாடினால், கேஸ் போடுவீங்களா?: ப்ரியா வாரியர் மீதான வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: கண்ணடித்ததால் பிரபலமான நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் மீதான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஒரு அடார் லவ் மலையாள படத்தில் வரும் பாடல் காட்சியில் ஹீரோவை பார்த்து கண்ணடித்ததால் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபாலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். அவர் ஏதோ பெரிய சாதனை செய்தது போன்று தேசிய அளவில் பேசப்பட்டார்.
சமூக வலைதளங்களில் திரும்பிய பக்கம் எல்லாம் அந்த ப்ரியா கண்ணடித்த புகைப்படமாகத் தான் இருந்தது. கண்ணடித்து கூட பிரபலமாகலாம் என்பதை ப்ரியாவை பார்த்து தெரிந்து கொண்டோம்.

ப்ரியா
ப்ரியா கண்ணடித்தது முஸ்லீம்களின் மத உணர்வை காயப்படுத்தும் வகையில் இருந்தது என்று கூறி தெலுங்கானாவில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இஸ்லாத்தில் கண்ணடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பள்ளி மாணவி சக மாணவனை பார்த்து கண்ணடிக்கும் காட்சியில் நடித்துள்ளார் ப்ரியா. இந்த செயல் தெய்வ நிந்தனை ஆகும். அதனால் ப்ரியா, படத்தின் இயக்குனர் உமர் அப்துல் வஹாப், தயாரிப்பாளர் ஜோசப் ஈப்பன் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டு அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

டெல்லி
தெலுங்கானாவில் தன் மீது தொடரப்பட்ட வழக்கை எதிர்த்து ப்ரியா உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரின் வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்தது உச்ச நீதிமன்றம். ப்ரியா மீதான வழக்கை தள்ளுபடி செய்ததுடன் முஸ்லீம்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறி இனி எங்கும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் ப்ரியா நிம்மதி அடைந்துள்ளார்.

கண்ணடி
ஒரு படத்தில் யாரோ பாட்டு பாடினால் உடனே வேலை இல்லாமல் வந்து வழக்கு தொடர்வதா என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மிஸ்ரா கேள்வி எழுப்பியுள்ளார். ப்ரியா கண்ணடித்த பாடல் வரிகள் அபத்தமானது என்றும், அவை மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருந்தது என்றும் கூறி மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. ப்ரியா மீது மட்டும் அல்லாமல் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலம்
18 வயதில் கண்ணடித்து பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். அவர் கண்ணடித்த வீடியோ வெளியான ஒரு வாரத்தில் இன்டர்நெட்டில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் ஆனார். மீம்ஸ் கிரியேட்டர்கள் எல்லாம் முழு நேரமாக ப்ரியா பிரகாஷ் வாரியரை மட்டுமே வைத்து மீம்ஸ் போட்டனர். தமிழ் பசங்களோ ப்ரியா கண்ணடித்ததை கொண்டாடினார்கள். அதை பார்த்த தமிழ் பெண்களோ, ஆமாம் இவளுக்கு மட்டும் தான் கண் இருக்கிறது என்பது போன்று ஓவரா சீன் போடுறாளே என்று கடுப்பாகினர்.


Click it and Unblock the Notifications











