லேடி சூப்பர் ஸ்டார்னு உங்களை யாரும் அழைக்கவில்லை.. நயன்தாராவை கிண்டல் செய்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: நடிகை நயன்தாரா சினிமாவுக்கு வந்த புதிதில் முதலில் சிம்புவை காதலித்தார். அந்தக் காதல் பாதியில் முடிந்ததை அடுத்து பிரபுதேவாவை காதலித்து மதமும் மாறினார். ஆனால் அந்தக் காதலும் பிரேக் அப்பில் முடிந்தது. இதனையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். அப்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அவர். இந்தச் சூழலில் அவர் தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அழைக்க வேண்டாமென கோரிக்கை விடுத்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் கிண்டல் செய்திருக்கிறார்.
கேரளாவில் பிறந்து வளர்ந்து மலையாள திரையுலகில் தனது திரை பயணத்தை ஆரம்பித்த நயன்தாரா; தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்ததாக ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. அந்த ஹிட்டுக்கு பிறகு நயனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அந்தவகையில் சிம்புவுடன் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்தார். அந்த சமயத்தில் இரண்டு பேரும் தீவிரமான காதலில் இருந்தார்கள்.

ஓவர் நெருக்கம்: அந்தக் காதலின் வெளிப்பாடாக இரண்டு பேரும் அந்தப் படத்தில் படு நெருக்கமாக நடித்தார்கள். அதுவரை அப்படி ஒரு கவர்ச்சியை நயன் காட்டியதில்லை. சூழல் இப்படி இருக்க இரண்டு பேரும் தனி அறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அந்தப் புகைப்படங்கள் வெளியானதற்கு காரணம் சிம்புதான் என்று அப்போது வெளிப்படையாகவே குற்றச்சாட்டுக்கள் வந்தன. ஆனால் இருவரும் அதுகுறித்து எதுவும் பேசாமல் தங்கள் காதலை பிரேக் அப் செய்துகொண்டார்கள்.
லேடி சூப்பர் ஸ்டார் காதல்: சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு வில்லு படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் பிரபுதேவாவை காதலித்தார் நயன். பிரபுவுக்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கு மாறினார். மேலும் சினிமாவிலிருந்தும் ஒதுங்கினார். ஆனால் அந்தக் காதலும் பாதியில் முடிந்ததை அடுத்து சில காலம் தனிமையில் இருந்த நயன் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இரண்டு பேரும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு பிஸியாக நடித்துவரும் அவரை சிலர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதுண்டு.
நயனின் கோரிக்கை: இந்நிலையில் நயன்தாரா நேற்று வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில், "என்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம். எனது வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்திருக்கிறது. உங்கள் அன்பும் ஆதரவும்தான் அதற்கு அழகு சேர்த்திருக்கிறது. எனது வெற்றியின்போது என்னை தோளில் சாய்த்து பாராட்டியதோடு கடினமான தருணங்களில் என்னை தூக்கி நிறுத்தவும் செய்தீர்கள். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
ப்ளூ சட்டை மாறனின் கிண்டல்: ஆனால் இனிமேல் என்னை நயன்தாரா என்று மட்டுமே அழையுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து பலரும் நயனை ட்ரோல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக உங்களை யாரும் அப்படி அழைக்கவில்லை விக்னேஷ் சிவன் மட்டும்தான் அழைப்பார் என்று கிண்டல்கள் பறந்துகொண்டிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் நயனின் புகைப்படத்தை பகிர்ந்து,"படம் பார்ப்பவர்கள் அப்படி அழைத்ததாக தெரியவில்லை. உங்கள் பட டைட்டில்களிலும், மீடியாவிலும்தான் குறிப்பிடுகிறார்கள்" என்று தெரிவித்திருக்கிறார். அவரது இந்த ட்வீட் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications