ஸ்ரீதேவியின் நினைவு தினம்.. நீங்கள் இல்லாத வாழ்வை வெறுக்கிறேன்.. உருகிய ஜான்வி கபூர்!
சென்னை : நடிகை ஸ்ரீதேவியின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தில், அம்மாவுடன் இருக்கும் அரிய புகைப்படத்தை ஜான்வி கபூர் பதிவிட்டுள்ளார்.
நடிகை ஸ்ரீ தேவி கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
ஸ்ரீ தேவி இறந்து இன்றோடு நான்கு ஆண்டு கடந்துள்ளதை நினைத்து அவரது ரசிகர்கள் இணையத்தில் உருகி வருகின்றனர்.

ஸ்ரீதேவி
நடிகைகளில் சூப்பர் ஸ்டார் என சொல்லும் அளவிற்கு புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் பாரதிராஜாவையே சேரும். இவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் கதாபாத்திரமான மயில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

கனவுக்கன்னி
அதனை தொடந்து பாலிவுட்டிலும் சோல்வா சாவான் என்ற பெயரில் இந்தப்படம் ரீமேக் செய்யப்பட்டது. அங்கும் ஸ்ரீதேவி கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க, பாலிவுட்டின் கனவுக்கன்னியாக மாறினார். ஏறத்தாழ பாலிவுட்டிலும் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி.

காதல் திருமணம்
சினிமாவில் பிசியாக நடித்து கொண்டிருந்த போதே பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் துபாயில் குளியல் அறைக்கு சென்ற போது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். நடிப்பில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ள ஸ்ரீதேவியின் நினைவு நாளான இன்று அவரது ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

ஐ லவ் யூ அம்மா
நடிகை ஸ்ரீதேவியின் நான்காம் ஆண்டு நினைவு நாளான இன்று, ஸ்ரீதேவியின் மூத்த மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அம்மாவுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து உருகியுள்ளார். அதில், நான் என் வாழ்க்கையில் உங்களுடன் இல்லாமல் அதிக ஆண்டுகள் வாழ்ந்து இருக்கிறேன். ஆனால் நீங்கள் இல்லாத வாழ்க்கையில் இன்னொரு வருடம் சேர்ந்திருப்பதை நான் வெறுக்கிறேன். நாங்கள் உங்களைப் எப்போதும் பெருமைப்படுத்துவோம் அம்மா. என்றும் உங்களை காதலிப்பேன். என ஜான்வி கபூர் மனம் உருகி பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











