ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தால் வந்த யோகம்.. அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய நடிகை..எவ்வளவு தெரியுமா?
சென்னை: 2014ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஃபக்லி படம் மூலம் சினிமாவில் அறிமுகமான கியாரா அத்வானி தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் கியாரா அத்வானி தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளார்.
நடிகை கியாரா அத்வானி 2016ம் ஆண்டு வெளியான எம்.எஸ். தோனி படத்தில் சுஷாந்த் சிங்கின் மனைவியாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் இவருக்கு நட்சத்திர அந்தஸ்த்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பின் தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக பரத் எனும் நான் படத்தில் நடித்திருந்தார்.

லஸ்ட் ஸ்டோரீஸ்: இந்தி, தெலுங்கு திரையுலகில் பிஸியான நடிகையாக நடித்து வந்த கியாரா, நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியில் விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த தொடரில் இவர் வைப்ரேட்டர் பயன்படுத்தும் சீன் இன்றளவும் இணையத்தில் செம டிரெண்டிங்கில் உள்ளது. படு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் இவர், ஷெர்ஷா படத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில், கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
காதல் திருமணம்: திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வரும் கியாரா அத்வானி ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்தை வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார்.
சம்பளத்தை உயர்த்திய நடிகை: நடிகை கியாரா அத்வானி ஒரு படத்திற்கு ரூ. 2 முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும், கபீர் சிங் படத்தில் நடித்ததற்காக 3 கோடி சம்பளமாக வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை தொடர்ந்து, தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டான் படத்தின் மூன்றாம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை கியாரா அத்வானி ரூ. 13 கோடியை சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ரன்வீர் சிங் நாயகனாகவும் கியாரா அத்வானி நாயகியாகவும் நடிக்க இருக்கிறார்கள். டான் 3 திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஷாருக்கானின் டான் : 2006ஆம் ஆண்டு வெளியான் டான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை அள்ளியது. இத்திரைப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க பிரியங்கா சோப்ரா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டான் இரண்டாம் பாகமும் வெளிவந்தது. இந்த இரண்டு திரைப்படங்களையும் பர்ஹான் அக்தர் இயக்கி, தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











