விடுதி மேலாளரை மிரட்டியதாக மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு.. 30 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
சென்னை: நட்சத்திர விடுதி மேலாளரை மிரட்டியதாக நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடிகை மீரா மிதுன் பட்டியலின மக்கள் குறித்து ஆண் நண்பருடன் சேர்ந்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு அமைப்புகள் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார் அளித்தன. இந்த விவகாரத்தில் ஆஜராகும்படி நடிகை மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன்
ஆனால் போலீஸில் ஆஜராகாமல் தலைமறைவானார் மீரா மிதுன். இதனை தொடர்ந்து கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் சாம் அபிஷேக்கை போலீசார் கடந்த மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். இதனை தொடர்ந்து மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பேசியது தவறு தான்
இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில், தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலால், கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய போது, வாய் தவறி பட்டியலின சமுதாயத்தை பற்றி பேசியதாகவும், தான் பேசியது தவறு தான் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கால்ஷீட் கொடுத்திருக்கேன்
பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார் மீரா மிதுன். பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பரின் நீதிமன்றக் காவலை வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

30 பக்க குற்றப்பத்திரிக்கை
இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மீது மீண்டும் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதி மேலாளரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் மீரா மிதுன் மீது 30 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு மைக்கேல் புகாரின் பேரில் மீராமிதுன் மீது எழும்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழும்பூரில் உள்ள நடசத்திர விடுதியில் மீரா மிதுன் பிரஸ் மீட் வைத்தார்.

விடுதி மேலாளரை மிரட்டி
அந்த செய்தியாளர் சந்திப்பில் காவல்துறையை கடுமையாக விமர்சித்து பேட்டி அளிக்க அதை ஹோட்டல் நிர்வாகம் ஆட்சேபித்து மீரா மிதுனை பிரஸ் மீட் நடத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர். அப்போது மீரா மிதுன் விடுதி மேலாளரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து விடுதி மேலாளர் அளித்த புகாரின்பேரில் அவதூறாக பேசுதல், கொலைமிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் எழும்பூர் போலீஸார் வழக்கு தொடர்ந்தனர்.

நாளை ஆஜர்படுத்தப்படுகிறார்
இந்த வழக்கில் போலீஸார் இன்று 30 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இது சம்பந்தமாக மீரா மிதுன் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மீரா மிதுன் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதால் அவர் சிறையில் இருக்கும் காலம் இன்னும் நீட்டிக்கப்படும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











