ராதிகா எல்லாம் ஒரு ஹீரோயினா?.. விமர்சனத்தை கடுமையாக எதிர்கொண்டார்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
சென்னை: நடிகை ராதிகா கோலிவுட்டில் சீனியர் நடிகைகளில் ஒருவர். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் மிகச்சிறந்த நடிகை என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். சரத்குமாரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அவர் தற்போதும் சினிமாவில் பிஸியாக நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்து ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் தவிர்க்கவே முடியாத ஆளுமை எம்.ஆர்.ராதா. பெரியாரின் தீவிர தொண்டரான அவருக்கு பிறந்தவர்தான் ராதிகா. வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவுக்கு வந்திருந்த அவரை எதேச்சையாக பார்த்த பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தினார். ஆனால் முதலில் படத்தில் நடிப்பதற்கு ராதிகாவுக்கு விருப்பமே இல்லை. இருந்தாலும் விடாத பாரதிராஜா எப்படியோ ராதிகாவிடம் பேசி சம்மதிக்க வைத்துவிட்டார்.

முன்னணி நடிகை: ராதிகாவின் முதல் படமான கிழக்கே போகும் ரயில் மெகா ஹிட்டடித்தது. முக்கியமாக ராதிகாவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல அப்ளாஸ் கிடைத்தது.முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதன்படி ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து டாப் நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வித்தியாசத்தையும் காண்பிக்க ஆரம்பித்தார்.
திருமணம்: சினிமாவில் பீக்கில் இருந்தபோது அவர் நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தனை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண உறவு பாதியில் முடிந்தது. இதனையடுத்து நடிகர் விஜயகாந்த்தை அவர் தீவிரமாக காதலித்ததாகவும் ஆனால் அந்தக் காதல் சில காரணங்களால் கைகூடாமல் போனதாகவும் ஒரு பேச்சு உண்டு. இறுதியாக நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.

பிஸியான நடிகை: ஒருகட்டத்தில் ஹீரோயின் வாய்ப்பு குறைய ஆரம்பிக்க குணசித்திர வேடங்களில் நடித்து ரகளை செய்தார் ராதிகா. ஜீன்ஸ், சூர்யவம்சம் உள்ளிட்ட படங்களில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்திலும் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிக்காட்டியிருந்த அவர்; கடைசியாக மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார். சினிமா தவிர்த்து சின்னத்திரையில் சித்தி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி, சித்தி 2 என ஏகப்பட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.'
சித்ரா லட்சுமணன் பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட சித்ரா லட்சுமணன் சமீபத்தில் ராதிகா குறித்து பேசுகையில், "ராதிகா அறிமுகமான கிழக்கே போகும் ரயில் படத்தின்போது நான் பிஆர்ஓவாக இருந்தேன். அந்த சமயத்தில் ராதிகாவை ஹீரோயினாக பாரதிராஜா செலக்ட் செய்துவிட்டார். அதனையடுத்து அவரது புகைப்படத்தை பத்திரிகையில் போட்டு ஹீரோயின் என்று அறிவித்துவிடலாமா என்று கேட்டேன்.
அதற்கு பாரதிராஜாவோ இல்லை வேண்டாம். இப்போதைக்கு ராதிகாவின் பெயரை மட்டும் போடுங்கள். புகைப்படம் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அதன்படியே நானும் செய்தேன். பாரதிராஜா அப்படி சொன்னதுக்கு காரணம் என்னவென்றால் அந்த சமயத்தில் ராதிகா கருப்பாக, குண்டாக இருப்பார். இவரெல்லாம் ஒரு ஹீரோயினா என்று பலர் சொல்லிவிடுவார்களோ என்றுதான் பாரதிராஜா அப்படி சொன்னார்" என்றார்.


Click it and Unblock the Notifications











