சமூக வலைதள பதிவுகளை திடீரென அழித்த தீபிகா படுகோனே.. புத்தாண்டை முன்னிட்டு ஆடியோ.. என்ன ஆச்சு?
மும்பை: நடிகை தீபிகா படுகோனே டிசம்பர் 31ம் தேதி திடீரென தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பதிவுகளை நீக்கியது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியது.
தீபிகா படுகோனேவின் சமூக வலைதள பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டதா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், தற்போது, 2021ம் புத்தாண்டை முன்னிட்டு புதிய ஆடியோ டைரியை வெளியிட்டுள்ளார்.
அதில், தனது ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார் நடிகை தீபிகா படுகோனே.

ஜனவரியில் சபாக்
கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் தீபிகா படுகோன் நடிப்பில் சபாக் திரைப்படம் வெளியானது. ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலின் வலிகள் நிறைந்த உண்மை கதையை மையமாக வைத்து அந்த படம் உருவானது. சபாக் படத்தின் ரிலீசுக்கு முன்னதாக பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவாக தீபிகா குரல் கொடுத்து பரபரப்பை கிளப்பினார்.

தீபிகா தான் தலைவி
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பாலிவுட்டில் புழங்கும் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தப்பட்டது. போதைப் பொருள் வாட்ஸ்அப் குழுவுக்கு தீபிகா தான் தலைவி என்றும் வதந்திகள் பரவி சர்ச்சையை கிளப்பின.

ஹேக் செய்யப்பட்டதா
இந்நிலையில் டிசம்பர் 31ம் தேதி நடிகை தீபிகா படுகோனேவின் சமூக வலைதள பக்கங்களான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் முழுவதும் டெலிட் செய்யப்பட்டன. தீபிகாவின் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டதா? என ரசிகர்கள் குழம்பித் தவித்த நிலையில், ஆடியோ டைரி ஒன்றை வெளியிட்டுள்ளார் தீபிகா
ரசிகர்களுக்கு மெசேஜ்
இந்நிலையில், இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தானே பேசிய ஆடியோ டைரியை நடிகை தீபிகா படுகோன் வெளியிட்டுள்ளார். அதில், 2020ம் ஆண்டு பலருக்கும் நிச்சயமற்ற தன்மை கொண்ட ஆண்டாகவே இருந்தது என நினைக்கிறேன். அதே சமயம் பலருக்கும் நன்றி சொல்லும் ஆண்டாகவும் இருந்தது. இந்த 2021ம் ஆண்டு அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துகிறேன் எனக் கூறியுள்ளார். தீபிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 52 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

என்ன ஆச்சு?
நடிகை தீபிகா படுகோனே இப்படி திடீரென தனது சமூக வலைதள பதிவுகளை டெலிட் செய்துவிட்டு, புதிய தொடக்கத்தை ஆரம்பித்ததற்கு பின்னால் என்ன காரணம் இருக்கிறது என பலரும் யோசித்து வருகின்றனர். புதிய தொடக்கத்தை நாம் தொடங்க வேண்டும் என்பதற்காக பழைய நினைவுகளை அழித்துள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











