நடிகை அஞ்சலி மீது சேலம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு

கற்றது தமிழ், அங்காடித் தெரு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் அஞ்சலி. தனது உயிருக்கு தனது சித்தி மற்றும் திரைப்பட இயக்குனர் களஞ்சியம் ஆகியோரால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அஞ்சலி கூறியது பொய் என்று களஞ்சியம் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் தமிழர் நலம் இயக்க நிர்வாகிகள் சார்பில் அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஓமலூர் ஆணைக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவர் சேலம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், சென்னை வளசரவாக்கத்தில் வசிக்கும் நடிகை அஞ்சலி, எங்கள் இயக்கத் தலைவர் களஞ்சியத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவரால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி அவதூறு பரப்பியுள்ளார். இதனால் இயக்கத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு அதன் வளர்ச்சிக்கும் கலங்கம் ஏற்படுத்தியுள்ளார். இதனால், எங்களுக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, நடிகை அஞ்சலி மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











