சினிமாவில் டாஸ்மாக் காட்சிகள்... நடிகைகள் தேவயானி, சோனா கண்டனம்!
சென்னை: சினிமாவில் டாஸ்மாக் காட்சிகளும், பெண்களை கேலி செய்யும் காட்சிகளும் அதிகரித்துவிட்டதற்கு நடிகைகள் தேவயானி, சோனா கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மெய்யழகி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. டிரெய்லரை தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி வெளியிட, இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் நடிகை தேவயானி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியபோது, ''இந்த மாதிரி தரமான கதையம்சம் கொண்ட படங்கள் அபூர்வமாகவே வருகின்றன. மிக நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி எனக்கு ஏற்பட்டது.
இப்போது வரும் பெரும்பாலான படங்களில் காமெடி என்ற பெயரில் பெண்களை கேலி-கிண்டல் செய்கிறார்கள். மச்சி, மச்சான் என்று வசனக் காட்சிகள் வருகின்றன. பெரும்பாலான படங்களில் குடிகாரர்களின் 'டாஸ்மாக்' காட்சிகள் இடம் பெறுகின்றன. இதெல்லாம் வேதனையாக உள்ளது. கண்டிக்கத்தக்கது.
பெரிய படம் சின்ன படம் என்று வேறுபாடு பார்க்கக்கூடாது. தரமான கதையம்சம் கொண்ட படங்களே பெரிய படங்கள்''என்றார்.
சோனா
அடுத்து பேச வந்த நடிகை சோனா, ''சமீபகாலமாக சில படங்களை பார்க்கவே பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெறுகின்றன. 'டாஸ்மாக்' காட்சிகள் இல்லாத படங்களே இல்லை'' என்றார்.


Click it and Unblock the Notifications











