ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு..அவருடன் டேட்டிங் போகிறேனா?..இறுதியாக சொல்கிறேன்..திவ்ய பாரதி காட்டம்
சென்னை: ஜிவி பிரகாஷும் சைந்தவியும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்களது காதல் பள்ளி காலத்திலேயே மலர தொடங்கிவிட்டது. பிறகு வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்து அன்வி என்கிற மகளை பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்துவந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் கடந்த வருடம் அவர்கள் தாங்கள் பிரிவதாக அறிவித்தார்கள். மேலும் நீதிமன்றத்துக்கும் சென்று சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டார்கள். இதற்கிடையே ஜிவியும், சைந்தவியும் நடிகை திவ்ய பாரதியால்தான் பிரிந்துவிட்டார்கள் என்று தகவல்கள் பரவிக்கொண்டிருந்தன.
ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகனான ஜிவி பிரகாஷ் கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். ஏகப்பட்ட ஹிட் ஆல்பங்களை கொடுத்திருக்கும் அவர் சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருதையும் வென்றிருக்கிறார். இதற்கிடையே அவர் நடிப்பில் ஆர்வம் கொண்டு ஹீரோவாகவும் தனது பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு ஒரு சில படங்கள் தவிர்த்து வேறு எந்தப் படமும் பெரிய வெற்றியை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிங்ஸ்டன்: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கிங்ஸ்டன் திரைப்படத்தின் மீது அவர் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை வைத்திருந்தார். அப்படம் அவரது 25ஆவது படம் ஆகும். ஆனால் அந்தப் படமும் தோல்வியைத்தான் சந்தித்தது. தொடர்ந்து ஹீரோவாக சறுக்கிவரும் ஜிவி பிரகாஷ் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று முட்டி மோதிக்கொண்டிருக்கிறார். அடுத்ததாக அவர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படம் தனது ஹீரோ பயணத்தில் கண்டிப்பாக ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார் அவர்.
இசையமைப்பாளராகவும் பிஸி: அவர் எவ்வளவு படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அவர் தொடர்ந்து இசையமைக்க வேண்டுமென்பதுதான் பலரது விருப்பமாக இருக்கிறது. ஜிவியும் இப்போது இசையமைப்பில் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார். அவரது இசையமைப்பில் கடைசியாக வெளியான அமரன், லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டாகின. அடுத்ததாக அவரது இசையமைப்பில் அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகிறது. அதிலிருந்து இதுவரை ரிலீஸான இரண்டு சிங்கிள்களும் நல்ல வரவேற்பைதான் பெற்றிருக்கின்றன.

சைந்தவியுடன் பிரிவு: இதற்கிடையே அவர் பள்ளியில் படிக்கும்போது சைந்தவியை காதலித்தார். அவர்களது காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்ததைத் தொடர்ந்து இரண்டு பேருக்கும் திருமணமும் நடந்தது. அன்வி என்கிற மகளும் இருக்கிறார். ஆனால் சில காரணங்களால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள். சமீபத்தில்கூட தங்களது விவாகரத்துக்காக நீதிமன்றம் வந்த அவர்கள்; மீண்டும் செல்லும்போது ஒரே காரில் புறப்பட்டு சென்றார்கள். திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்தாலும் இசைக்காக அவர்கள் ஒன்றாகவே பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.
திவ்ய பாரதி காரணமா?: அதேசமயம் அவர்களது பிரிவுக்கு நடிகை திவ்ய பாரதிதான் காரணம் என்று கூறப்பட்டது. கிங்ஸ்டன் பட ப்ரோமோஷனில் இரண்டு பேருமே அதனை திட்டவட்டமாக மறுத்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் மீண்டும் ஜிவி விஷயத்தில் தன்னுடைய பெயர் இழுக்கப்படுவதால் கடுப்பான திவ்ய பாரதி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், "ஒரு தனிப்பட்ட குடும்ப விவகாரத்தில் எனது பெயர் இழுக்கப்பட்டிருக்கிறது. எனக்கு அதில் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
டேட் செய்யமாட்டேன்: ஜிவி பிரகாஷின் குடும்ப விவகாரத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நான் ஒரு நடிகரை எப்போதுமே டேட் செய்யமாட்டேன். அதுவும் ஒரு திருமணமான ஆன ஆணை டேட்டிங் செய்யவே மாட்டேன். ஆதாரமற்ற வதந்திகள் பரவுகின்றன. இதுவரை நான் அமைதியாகத்தான் இருந்தேன். ஆனால் இது ஒரு எல்லையை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை நான் அனுமதிக்கமாட்டேன். இந்த விஷயத்தில் இதுதான் எனது முதல் மற்றும் இறுதி அறிக்கை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











