மனுசி படம்.. மூன்று நடிகைகள் நடிக்க தயங்கினார்கள்.. உண்மையை போட்டுடைத்த கோபி நயினார்
சென்னை: விஜய் நடித்த கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று கூறி போராடியவர் கோபி நயினார். அதன் பிறகு அறம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார். முதல் படமே அட்டகாசமாக இருந்ததால் கோபி நயினார் நம்பிக்கைக்குரிய இயக்குநர் என்ற பெயரையும் பெற்றார். இப்போது அவர் ஆண்ட்ரியாவை வைத்து மனுசி படத்தை இயக்கியிருக்கிறார். இதன் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தச் சூழலில் படம் குறித்து கோபி நயினார் பல விஷயங்களை ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் அறம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கோபி நயினார். நயன் தாரா நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டானது. குறிப்பாக நடிகையை மையமாக வைத்து படம் எடுத்தும் பெரிய ஹிட்டை கொடுக்கலாம் என்ற டெம்ப்ளேட்டை கோபி நயினார் உருவாக்கினார். அந்தப் படத்திலிருந்து நயன் மீதான மதிப்பு ரசிகர்களிடம் அதிகளவு உயர்ந்தது.

கத்தி கதை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கத்தி. விஜய்யின் கரியரிலும், ஏ.ஆர்.முருகதாஸின் கரியரிலும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக அந்தப் படம் அமைந்து மெகா ஹிட் ஆனது. ஆனால் அந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று பெரிய சட்டப்போராட்டமே கோபி நயினார் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருப்பர் நகரம்: இந்த சூழலில் அறம் படத்துக்கு பிறகு அவர் ஜெய்யை வைத்து கருப்பர் நகரம் என்ற படத்தை இயக்கவும் கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படம் வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. கோபி நயினார் இயக்கம் என்பதால் கண்டிப்பாக இதில் வடசென்னையின் அசல் முகங்களையும் , வாழ்வியலையும் பார்க்கலாம் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே இருக்கிறது.
மனுசி: இதற்கிடையே அவர் இப்போது ஆண்ட்ரியாவை வைத்து மனுசி படத்தை இயக்கியிருக்கிறார். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. படத்தில் ஆண்ட்ரியாவுடன் நாசர், பாலாஜி சக்திவேல், தமிழரசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் அதில் இடம்பெற்ற வசனங்களை கொண்டாடிவருகின்றனர். மேலும் இந்தப் படம் வெளியான பிறகு கண்டிப்பாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தத்தான் போகிறது என்று இப்போதே ஆரூடம் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
கோபி நயினார் பேட்டி: இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "மனுசி கதையை மொத்தம் மூன்று ஹீரோயின்களிடம் சொன்னேன். அதாவது முதலில் ஜோதிகாவிடம்தான் இந்தக் கதையை சொன்னேன். ஆனால் அவர் சில காரணங்களால் நடிக்கவில்லை. அதற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ், சமந்தா ஆகிய இரண்டு பேரையும் நடிக்க வைக்க முயற்சி செய்தேன். ஆனால் அதுவும் முடியவில்லை. பிறகு ஆண்ட்ரியாவிடம் சொன்னேன் அவருக்கு கதை ரொம்பவே பிடித்துவிட்டது. படம் அருமையாக வந்திருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











