அன்னபூரணி படம் நீக்கம்.. திரைத்துறைக்கே நல்லதல்ல.. வெற்றிமாறன் கருத்து!
சென்னை: நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி திரைப்படம் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறன், தணிக்கை குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை புற அழுத்தங்களால் OTT யில் இருந்து நீக்குவது திரைத்துறைக்கே நல்லது கிடையாது என தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
நயன்தாரா நடித்த அன்னபூரணி படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ந் தேதி தியேட்டரில் வெளியானது. இப்படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். தனது லட்சியத்தை அடைய துடிக்கும் பெண்ணாக இப்படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் அண்மையில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

அன்னபூரணி படம் நீக்கம்: அன்னபூரணி படத்தின் ஒரு காட்சியில், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஃபர்ஜான் என்ற கதாபாத்திரம், கதாநாயகியை இறைச்சி சாப்பிட வைப்பதற்காக ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்றும், அர்ச்சகரின் மகளான நயன்தாரா நமாஸ் செய்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இது இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, மும்பையை சேர்ந்த, சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.
புண்படுத்தும் வசனங்கள்: இந்த நிலையில், தற்போது இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இடம் பெற்றது தொடர்பாக படத்தை இணைந்து தயாரித்த ஜீ நிறுவனம் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. அக்கடிதத்தில் படத்தில் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கும் வரை அப்படத்தை நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்குவதாக உறுதி அளித்துள்ளது.
வெற்றிமாறன் கருத்து: இந்த விவகாரம் குறித்து பேசி உள்ள இயக்குநர் வெற்றிமாறன், தணிக்கைச் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது. இது ஓடிடிக்கும் பொருந்தும். ஆனால், மத்திய தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை, புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது என்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது. ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கை குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் தணிக்கைக் குழுவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் என்று வெற்றிமாறன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











