நயன்தாரா எப்போவுமே அப்படித்தான்.. பழகுனா தெரியும்.. ஓபனாக பேசிய அஜித் பட இயக்குநர்
சென்னை: நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக டெஸ்ட் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. அந்தப் படமானது நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இதில் நயனுடன் மீரா ஜாஸ்மின், மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சசிகாந்த் இயக்கியிருக்கிறார். கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. மேலும் நயன் நடிப்பில் டாக்சிக் உள்ளிட்ட படங்களும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவர் குறித்து இயக்குநர் விஷ்ணுவர்தன் பேசியிருப்பது ட்ரெண்டாகியிருக்கிறது.
மலையாளத்தில் நடிகையாக தனது திரை பயணத்தை ஆரம்பித்த நயன்தாராவை தமிழ் சினிமா ஐயா படத்தின் மூலம் வரவேற்றது. அந்தப் படம் ஓரளவுக்கு நல்ல விமர்சனத்தை பெற்றது. அதனையடுத்து இரண்டாவது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார் நயன். அப்படம் 800 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது. இதனால் முதல் இரண்டு படங்களிலேயே நயன்தாரா முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார். சிம்பு, விஜய், அஜித், தனுஷ், சூர்யா உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு நடித்தார்.

காதல் தோல்விகள்: அவர் பீக்கில் இருக்கும்போது சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்தார். அப்போது இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் திடீரென அந்தக் காதல் பிரேக்கப்பில் முடிந்தது. அந்த சமயத்தில் இரண்டு பேரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தின. அந்தக் காதல் தோல்விக்கு பிறகு சிங்கிளாக இருந்த அவர்; வில்லு படத்தில் நடித்தபோது இயக்குநரும், நடிகரும், நடன அமைப்பாளருமான பிரபுதேவாவை காதலித்தார்.
விக்கியுடன் திருமணம்: பிரபுதேவா ஏற்கனவே ரமலத் என்கிற பெண்ணை திருமணம் செய்திருந்தார். ஆனால் நயனுடனான காதலுக்காக ரமலத்தை விவாகரத்து செய்தார். நயனும் பிரபுதேவாவுக்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கு மாறினார். இருப்பினும் அந்தக் காதலும் பிரேக்கப்பில் முடிந்தது. இரண்டு காதல் தோல்விகளுக்கு பிறகு சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நானும் ரௌடிதான் படத்தில் நடிக்கையில் விக்னேஷ் சிவனை காதலித்தார். பிறகு திருமணமும் செய்துகொண்டார்.
இரண்டு குழந்தைகள்: திருமணம் ஆன கையோடு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்கள் அவர்கள். அதுவும் சர்ச்சையாக்கப்பட்டது. ஆனால் அந்த விவகாரத்தில் விதிமீறல் எதுவும் செய்யப்படவில்லை என்று அரசு விசாரணையில் தெரியவந்தது. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்துவரும் அவர்; சமீபத்தில் சர்ச்சைகளிலும் சிக்க ஆரம்பித்திருக்கிறார். தனுஷுடனான மோதல், பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியது என அந்த லிஸ்ட் நீள்கிறது.
அடுத்த படங்கள்: சர்ச்சைகள் அவரை சுற்றினாலும் நடிப்பிலும், பிற தொழில்களிலும் பிஸியாக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக ஹிந்தியில் ஜவான், தமிழில் அன்னபூரணி படங்கள் வந்தன. இரண்டு படங்களில் ஜவான் மெகா ஹிட்டானது. அடுத்ததாக தமிழில் அவரது நடிப்பில் டெஸ்ட், மண்ணாங்கட்டி, ராக்காயி உள்ளிட்ட படங்கள் வருகின்றன. இவற்றில் டெஸ்ட் படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஷ்ணுவர்தன் நயன் குறித்து பேசியிருப்பது ட்ரெண்டாகியிருக்கிறது.
நயன் என்றாலே கெத்துதான்: அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "நயன்தாரா எப்போதுமே கெத்துதான். அது மற்றவர்களை எப்போதுமே பாதிக்காது. அவர் ஒரு குழந்தை மாதிரி என்று அவருடன் பழகிய அனைவருக்குமே தெரியும். அவர் அனைத்திலும் நேர்த்தியை கடைப்பிடிப்பவர். எப்போதும் ஆட்டிட்டியூட் காண்பிக்கமாட்டார்" என்றார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பில்லா, ஆரம்பம் ஆகிய இரண்டு படங்களில் நயன்தாரா நடித்திருப்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











