twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திட்டும் திவ்யா!

    By Staff
    |
    Click here for more images
    முன்னாள் குத்து ரம்யாவான, இன்னாள் திவ்யா, தமிழில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள பொல்லாதவன் சிறப்பாக ஓட ஆரம்பித்திருப்பதால் சந்தோஷமாகியுள்ளார். அந்த சந்தோஷத்தோடு தெலுங்குத் திரையுலகை திட்டவும் ஆரம்பித்துள்ளார்.

    குத்து படம் மூலம் தமிழுக்கு வந்த கன்னடத்து ரம்யா, அதன் பிறகு குத்து ரம்யா, குத்து ரம்யா என்று திரையுலகினராலும், ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்பட்டார். ஆனால் குத்து ரம்யா என்று கூப்பிடுவதில் சில்மிஷம் அடங்கியிருப்பதாக சிலர் கொடுத்த ஆலோசனையின் பேரில் தனது பெயரை திவ்யா என மாற்றிக் கொண்டார்.

    திவ்யாவாக மாறிய பின்னர் தூண்டில் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவர் நடித்து முதலில் வெளியாகியுள்ள படம் பொல்லாதவன். தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ள திவ்யா, இப்படம் சிறப்பாக ஓடிக் கொண்டிருப்பதை அறிந்து சந்தோஷமாகியுள்ளார்.

    முன்பு தமிழில் தனக்கு சரியான வாய்ப்புகள் வராததால், தமிழ் திரையுலகம் மீது துவேஷம் கொண்டிருந்த திவ்யா இப்போது தமிழ் திரையுலகை பாராட்டித் தள்ள ஆரம்பித்துள்ளார். அதேசமயம் தெலுங்குத் திரையுலைக திட்டவும் ஆரம்பித்துள்ளார்.

    ஏன் இந்த கொலை வெறி என்று திவ்யாவிடம் கேட்டால், தமிழ், கன்னடத் திரையுலகுடன் ஒப்பிடும்போது தெலுங்குத் திரையுலகம் மிகவும் பின் தங்கியுள்ளது (கன்னடத்தை விட தெலுங்குத் திரையுலகம் மோசமா - இது ரொம்ப ஓவருங்கோ)

    மூட நம்பிக்கைகளிலும், முட்டாள்தனமான சிந்தனைகளுடன் தெலுங்குத் திரையுலகம் உள்ளது. அதனால்தான் தெலுங்கில் நடிக்க நான் ஆர்வம் காட்டவில்லை. என்னைப் பொருத்தவரை தமிழ்தான் இப்போது முக்கியம் இங்குதான் திறமையான கலைஞர்கள் உள்ளனர். நல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளனர்.

    தென்னிந்திய சினிமாவின் தலைநகர் சென்னைதான் என்பதில் சந்தேகமே இல்லை. திறமையான கலைஞர்களுக்கு ஆதரவு தர தமிழ் மக்கள் என்றுமே தயங்கியதில்லை.

    எனக்கு இருந்த ஒரே வருத்தம் என்னவென்றால் என்னை குத்து ரம்யா என்று கூப்பிட்டதுதான். நான் குத்து ரம்யா இல்லை. எனது பெயரை இப்போது திவ்யா என்று மாற்றி விட்டேன். அதுதான் எனது ஒரிஜினல் பெயரும் கூட. பெயரை மாற்றியதும் எனக்கு நேரம் சரியாக இருக்கிறது (இது மூட நம்பிக்கை இல்லீங்களா மேடேம்)

    திவ்யா என பெயரை மாற்றிய பிறகு தமிழிலும், கன்னடத்திலும் எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன என்றார் திவ்யா.

    சில மாதங்களுக்கு முன்பு இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்தார் திவ்யா. ஆனால் அந்தப் படங்கள் ஊற்றிக் கொண்டு விட்டன. இதையடுத்து ராசியில்லாத ராணிகள் பட்டியலில் திவ்யாவை சேர்த்து விட்டனர். இதனால்தான் தற்போது தெலுங்குத் திரையுலகம் மீது திவ்யா பாய்ந்துள்ளதாக தெரிகிறது.

    தற்போது திவ்யா, கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தூண்டில் படத்தில் ஷாமுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில் சந்தியாவும் இருக்கிறார்.

    இதுதவிர கன்னடத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்கிறார். இப்படம் செக்ஸ் தொழிலாளர்கள் குறித்த படம். இப்படத்தை சந்தோஷ் சிவன் இயக்குகிறார்.

    Read more about: divya
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X