அந்த சமயத்தில் ரசிகர்கள் என் மீது செருப்பை வீசினார்கள்..! பல வருட ரகசியம் உடைத்த ராஜமாதா!
சென்னை: பாகுபலி படத்தில் ராஜமாதா கேரக்டரில் பட்டையை கிளப்பிய நடிகை ரம்யா கிருஷ்ணன் தன் மீது ரசிகர்கள் செருப்பை விசியது குறித்து பகிர்ந்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 1980 மற்றும் 90களில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் 260க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக
தமிழில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், மோகன் லால், மோகன் பாபு, நாகார்ஜூனா, ராஜ சேகர், வினோத் கன்னா உட்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போதும் சூர்யா, நாணி, பிரபாஸ் உட்பட பல இளம் நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

நீலாம்பரி கதாப்பாத்திரத்தில்
படையப்பா படத்தில் நீலாம்பரி என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லியாக நடித்தார் ரம்யா கிருஷ்ணன். இதன் மூலம் பெரும் பிரபலமானார். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் பெற்றார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

பாகுபலியில் கதாப்பாத்திரம்
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் ராஜ மாதா கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்தப் படம் அவருக்கு பெரும் புகழையும் பாராட்டையும் பெற்றுக்கொடுத்தது. அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

சோ ராமசாமியின் உறவினர்
நடிகை ரம்யா கிருஷ்ணன் மறைந்த நடிகரும் பத்திரிகை ஆசிரியருமான சோ ராமசாமியின் உறவினர் ஆவார். இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது சினிமா அனுபவங்கள் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

எதிர்பாராமல் நடிகை ஆகிவிட்டேன்
அதில் அவர் பேசியதாவது, நான் பிரபல நடன கலைஞராக வேண்டும் என்ற கனவில் எனது அம்மா குச்சிபுடி, பரதநாட்டியம் கற்றுக்கொடுத்தார். ஆனால் எதிர்பாராமல் நான் சினிமாவில் நடிகை ஆகிவிட்டேன். அதன்பிறகு நடன நிகழ்ச்சிகளுக்கு முழுக்கு போட்டுவிட்டு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

நீலாம்பரி முக்கியமானது
பின்னர் சினிமா தான் என் உலகம் என்றாகிவிட்டது. எனக்கு பெரிய பெயர் வாங்கித்தந்த கதாபாத்திரங்களில் படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி முக்கியமானது. நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லியாக நடிக்க வேண்டும் என்று கூறியதும் வருத்தப்பட்டேன். சவுந்தர்யா நடித்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைத்தேன். கடைசி வரை விருப்பம் இல்லாமல்தான் நடித்து முடித்தேன்.
Recommended Video

இனி என் கேரியர் முடிந்துவிட்டது
படம் ரிலீசான முதல் நாள் என் தங்கை தியேட்டருக்கு சென்று படம் பார்த்தாள். அங்கு திரையில் என்னை பார்த்தவுடன் ரசிகர்கள் செருப்பை கழட்டி வீச ஆரம்பித்தார்களாம். அதை கேட்ட பிறகு இனி என் கேரியர் முடிந்துவிட்டது என்றே நினைத்தேன். ஆனால் ஒரு வாரம் கழித்த பிறகு அந்த படத்தில் எனது கதாபாத்திரத்திற்கு எவ்வளவு பெயர் வந்தது என்பதை தெரிந்து மகிழ்ச்சியடைந்தேன்.

தமிழ் தெலுங்கில் பிஸியாக..
இப்போதும் நிறைய நடிகைகள் நீலாம்பரி போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு என்று சொல்வதை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், தமிழில் பார்ட்டி மற்றும் உயர்ந்த மனிதன் ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார். இதேபோல் தெலுங்கிலும் 2 படங்களில் நடித்து வருகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.


Click it and Unblock the Notifications











