'இன்னும் நூறு ராட்சசிகள் வர வேண்டும்'... அரசு பள்ளிகளின் நிலையை கடுமையாக விமர்சித்த ஜோதிகா!
ராட்சசி படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து சமூகத்துக்கு மிகவும் முக்கியமானது என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ராட்சசி போல இன்னும் நூறு படங்கள் வர வேண்டும் என நடிகை ஜோதிகா கூறினார்.
கவுதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ராட்சசி. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் ஜூலை 5ம் தேதி திரைக்கு வருகிறது.
இதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜோதிகா, ராட்சசி படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து சமூகத்துக்கு மிகவும் முக்கியமானது என்றார்.

தயாரிப்பாளருக்கு நன்றி
இதுகுறித்து அவர் பேசியதாவது, " முதலில் டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்துக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். சூர்யா, கார்த்தி தான் படம் தயாரிக்கிறார்கள், நானாக தான் அவர்களிடம் கேட்டேன். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

இயக்குனர் கவுதம்ராஜ்
இந்த படத்தின் இயக்குனர் கவுதம்ராஜ் முதல் பட இயக்குனர் மாதிரி வேலை பார்க்கவில்லை. அரசு பள்ளிகளின் நிலை மாறவேண்டும் எனும் கருத்தின் அடிப்படையில் ஏற்கனவே நிறைய படங்கள் வந்துள்ளன. ஆனால் படத்தில் அதை புதிய கோணத்தில் சொல்லியிருக்கிறார் கவுதம்.

இயக்குனரின் தெளிவு
இந்த படத்தில் அப்பா - மகள் உறவு பற்றி பேசியிருக்கும் விஷயம் புதிதாக இருக்கும். அதேபோல் காதலும் புதிதாக இருக்கும். தற்போது வரும் புதிய இயக்குனர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். கதை சொல்லும் போதே, அதில் என்ன சமுதாய கருத்து இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்து சொல்கிறார்கள்.

வித்தியாசமான நடிப்பு
இந்த படத்தில் என்னுடைய நடிப்பு வித்தியாசமானதாக இருக்கும். கீதா ராணி கதாபாத்திரத்தைவிட்டு வெளியே வந்து நடிக்காதபடி இயக்குனர் கவுதம் பார்த்துக்கொண்டார். நான் பாதி வடநாட்டுப் பெண் என தெரிந்திருந்தும், எனக்கு கஷ்டமான வசனங்களை கொடுத்தார். ஆனால் இரண்டு மாதத்துக்கு முன்கூட்டியே முழு ஸ்கிரிப்ட்டையும் கொடுத்துவிட்டதால் பழகிவிட்டேன்.

படத்தின் ஹீரோ
இந்த படத்தின் ஹீரோ இசையமைப்பாளர் சியன் ரோல்டன். பாடல்கள் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து மிகவும் முக்கியமானது. இன்னும் நிறைய படங்களில் சொல்லனும், அது தேவை தான். சாட்டை, பள்ளிக்கூடம் படங்களும் இதேபோல் இருந்தாலும், இன்னும் நூறு படங்கள் இதே கருத்தில் வரவேண்டும்.

மோசமாக உள்ள அரசு பள்ளிகள்
இன்று அரசு பள்ளிகளில் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அகரம் பவுண்டேசனில் உதவிபெறும் மாணவர்களில் 99 சதவீதம் பேர் அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள். பாடம் எடுக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. இப்படி இருக்கும் போது அவர்களை எப்படி நீட் தேர்வு எழுத சொல்ல முடியும். எனவே இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து சமுதாயத்துக்கு மிகவும் அவசியமானது", என்றார்.


Click it and Unblock the Notifications











