திருமணத்தில் ஆடுவதாகக் கூறி ரூ. 11 லட்சம் மோசடி.. விஜய் பட நாயகி மீது வழக்கு!
நடிகை அமீஷா பட்டேல் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: திருமணத்தில் ஆடுவதாகக் கூறி பண மோசடி செய்ததாக, நடிகை அமீஷா பட்டேல் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
விஜய், மீரா ஜாஸ்மின் நடித்திருந்த புதிய கீதை படத்தில் மற்றொரு நாயகியாக நடித்திருந்தவர் அமீஷா பட்டேல். தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையாததால், மேடை நிகழ்ச்சிகளில் நடனம் ஆட ஒப்புக்கொண்டு வந்தார். அதற்காக அவருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டது.

சினிமா வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், சமூக வலைதளங்களில் தன்னை பரபரப்புடன் வைத்துக்கொண்டிருக்கிறார் அமீஷா பட்டேல். தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டும் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்கள் தெரிவித்தும் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு, திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆட ஒப்புக்கொண்டு ரூ. 11 லட்சம் சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஒப்புக்கொண்டபடி திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆட வரவில்லை எனக் கூறி அவரை ஒப்பந்தம் செய்த நிறுவனம், அமீஷா பட்டேல் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. அவருடன் மேலும் 4 பேரும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக பவன் சர்மா என்பவர் அளித்துள்ள புகாரில், கடந்த 2016ம் ஆண்டு ஒரு திருமண நிகழ்ச்சியில் நடனமாடுவதற்காக அமீஷாவை ரூ.11 லட்சம் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்ததாகவும், ஆனால் அவர் நிகழ்ச்சி தொடங்கும் சமயத்தில் கூடுதலாக இரண்டு லட்சம் ரூபாய் கேட்டதாகவும் கூறியுள்ளார். தாங்கள் கூடுதல் பணம் தர மறுத்ததைத் தொடர்ந்து, தங்களிடம் தகவல் தெரிவிக்காமலேயே அமீஷா புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் அவர்க்ள் கூறியிருந்தனர்.
பணத்தை திருப்பி தர அமீஷா மறுத்து வருவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சர்மா தனது புகாரில் கூறியுள்ளார். பவன் சர்மா புகாரின் பேரில் அமீஷா மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ள மும்பை போலீசார், அமீஷா உள்ளிட்ட 5 பேரை மார்ச் 12 தேதி மும்பை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











