'டிராப்' ஆன ஜெனீலியா
ஜெனீலியாவுக்கும், தமிழ் சினிமாவுக்கும் ஏழாம் பொருத்தம் போல. புக் ஆன கெளதம் மேனன் படத்திலிருந்து ஜெனீலியாவைத் தூக்கி விட்டார்களாம்.
பாய்ஸ் மூலம் நடிகையான ஜெனீலியா (அப்போது ஹரிணி) அதன் பின்னர் தமிழில் எடுபடாமல் போய் விட்டார். சச்சின், சென்னைக் காதல் என சில படங்களில் நடித்தும் கூட ஜெனீலியாவுக்கு கோடம்பாக்கமும் கை கொடுக்கவில்லை, தமிழ் ரசிகர்களும் அருள் தரவில்லை.
இதனால் தெலுங்குக்குப் போன ஜெனீ, அங்கு பிக்கப் ஆகவே, பிசியான நடிகையாக மாறினார். இருந்தாலும் அவ்வப்போது தமிழிலும் தலை காட்டியபடிதான் இருக்கிறார்.
சமீபத்தில் கெளதம் மேனனின் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் 'வாரணம் ஆயிரம்' படத்தில் நடிக்க புக் ஆனார் ஜெனீ. ஆனால் திடீரென ஜெனீயைத் தூக்கி விட்டார் மேனன். வேறு புதுமுகமாக தேடிக் கொண்டிருக்கிறாராம்.
ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால் ஜெனீலியா தெலுங்கில் தருவதைப் போல தனக்கு இப்படத்திலும் சம்பளம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் கெளதம் சாரி சொல்லியுள்ளார். இதனால் ஜெனீலியாவே படத்திலிருந்து விலகிக் கொண்டு விட்டார் என்கிறார்கள்.
ஆனால் தனது கால்ஷீட் டைட்டாக இருந்ததால்தான் வாரணம் ஆயிரம் படத்தில் நடிக்க முடியாமல் விலகி விட்டதாக ஜெனீலியா கூறுகிறார்.
ஏற்கனவே இந்தப் படம் பல சிக்கலில் சிக்கித் தவித்து வந்தது நினைவிருக்கலாம். முதலில் திட்டமிட்டபடி படத்தை எடுத்த கெளதம் மேனன் லேட் செய்ததால் கடுப்பான சூர்யா, வேல் படத்தில் நடிக்கப் போய் விட்டார். இதனால் படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் பஞ்சாயத்தைக் கூட்டினார்.
இதையடுத்து வேல் படத்தில் நடித்து முடித்ததும் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்துக் கொடுப்பதாக ஒத்துக் கொண்டார் சூர்யா. இப்போது ஹீரோயினால் பிரச்சினை எழுந்துள்ளது.
சூர்யா வேல் படத்தில் பிசியாக இருந்ததாலும், ஹீரோயின் பிரச்சினையாகி விட்டதாலும், தற்போது திரிஷாவை வைத்து சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தை வேகமாக எடுத்துக் கொண்டிருந்தார் கெளதம் மேனன்.
இந்த நிலையில் வேல் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதாம். இதையடுத்து வாரணம் ஆயிரம் பட ஷூட்டிங்குக்கு ரெடி என்று சூர்யா கூறியுள்ளாராம். இதையடுத்து செப்டம்பர் இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் கெளதம் மேனன்.
ஏற்கனவே திட்டமிட்டபடி 2வது கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் எடுக்கவுள்ளனர். வருகிற 29ம் தேதி இதற்காக கலிபோர்னியாவுக்குப் பறக்கிறார்கள். அடுத்த மாதம் முழுவதும் படப்பிடிப்பு அங்குதான் நடைபெறவுள்ளதாம்.
படத்தில் ஏற்கனவே 2 ஹீரோயின்கள் உள்ளனர். அனேகமாக 3வது ஹீரோயினும் இருக்கலாம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications