விவாகரத்துக்கு பின் எப்படி இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி?.. அவரே சொல்லியிருப்பதை பாருங்க
சென்னை: தமிழில் மாப்பிள்ளை படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி விஜய் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. இவருக்கும் சொஹைல் கத்தூரியா என்பவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. காதலித்து திருமணம் செய்துகொண்டாலும் சில வருடங்களிலேயே அவர்களுக்குள் பிரச்னைகள் வர தொடங்கின. தொடர்ந்து அது நீண்டுகொண்டே இருந்ததால் இரண்டு பேரும் பரஸ்பர ஒப்புதலோடு திருமண வாழ்க்கையிலிருந்து வெளியேறி விவாகரத்து பெற்றிருக்கிறார்கள்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி; பிறகு ஹீரோயினாக மாறியவர் ஹன்சிகா மோத்வானி. ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்துக்கொண்டிருந்த அவரை; இயக்குநர் சுராஜ் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த அப்படம் தோல்வியை சந்தித்தது. ஆனால் ஹன்சிகாவின் அழகு அனைவரையும் கவர்ந்திழுத்தது. அதனையடுத்து தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கோலிவுட்டில் கிடைக்க ஆரம்பித்தன.

விஜய்யுடன் ஜோடி: அதன்படி விஜய்க்கு ஜோடியாக வேலாயுதம் படத்தில் நடித்தார். அப்படத்தில் சில்லாக்ஸ் பாடலில் அவர் காட்டிய கிளாமரை பார்த்து அவருக்கான க்ரேஸ் ரசிகர்களிடையே மேலும் உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து எக்கச்சக்க படங்களில் நடித்தார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், விஷால், சிம்பு என டாப் 10 ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார். நல்லபடியாக போய்க்கொண்டிருந்த அவரது மார்க்கெட் திடீரென டல்லடிக்க ஆரம்பித்தது.
சிம்புவுடன் காதல்: இது ஒருபக்கம் இருக்க நடிகர் சிம்புவை தீவிரமாக காதலித்தார். இரண்டு பேரும் அஜித் - ஷாலினி போல் இருப்போம் என்று ஸ்டேட்மென்ட்டும் விட்டார்கள். கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வார்கள் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் சில காரணங்களால் பிரிந்துவிட்டார்கள். சிம்புவை பிரிந்த ஹன்சிகா கடந்த 2022ஆம் ஆண்டு சொஹைல் கத்தூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு நடிப்பதையும் கிட்டத்தட்ட முழுதாக குறைத்துக்கொண்டார்.
விவாகரத்து பெற்ற ஹன்சிகா: இரண்டு பேரும் தங்களது திருமண வாழ்க்கையை நல்லபடியாகத்தான் தொடங்கினார்கள். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை அவர்களுக்கு சின்ன சின்ன பிரச்னைகள் வர ஆரம்பித்தன. அதனை சமாளித்துதான் வந்தார்கள். ஒருகட்டத்துக்கு மேல் சமாளிக்க முடியாதபடி பிரச்னைகள் வந்துகொண்டே இருந்ததால்; பரஸ்பர விவாகரத்து பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு மும்பை பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றம் டைவர்ஸ் வழங்கியது. தனக்கு எந்த ஜீவனாம்சமும் வேண்டாம் எனவும் கூறினார் ஹன்சிகா.
ஹன்சிகாவின் பதிவு: இந்நிலையில் விவாகரத்து பெற்ற பிறகு ஹன்சிகாவின் இஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று கவனம் பெற்றிருக்கிறது. அவர் தனது ஸ்டோரியில் பஞ்சாபி மொழியில், 'Chardi Kala Always' என வைத்திருக்கிறார். அதாவது, எப்போதும் உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் இருங்கள் என்று பொருள் ஆகும். இதன் மூலம், விவாகரத்து பெற்றாலும் தான் உற்சாகம் மற்றும் நம்பிக்கையுடன் இருப்பதாக ரசிகர்களுக்கு உணர்த்தியிருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications















