'அவர்கள் இல்லாமல் இதை கடந்திருக்க முடியாது..' வணங்குகிறார் 'மஹா' ஹன்சிகா மோத்வானி!
சென்னை: இந்த கொடிய காலத்தை அமைதியான வழியில் நாம் கடக்க உதவிய கொரோனா முன் களப் பணியாளர்களுக்கு நடிகை ஹன்சிகா நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை ஹன்சிகா மோத்வானி, இப்போது நடித்து வரும் படம், மஹா. இது அவருக்கு 50 வது படம்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்குகிறார்.

ஷூட்டிங் நிறைவு
நடிகை சாயாசிங், தம்பி ராமையா, நாசர், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர். சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஶ்ரீகாந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது நிறைவு பெற்றுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கிய படக்குழு ஷூட்டிங்கை முடித்துள்ளது.

கொடிய தொற்று
இதுபற்றி நடிகை ஹன்சிகா கூறியதாவது: இந்த 2020 ஆம் ஆண்டின் பெரும் பகுதி, இன்னல்கள் நிறைந்ததாக, நோயின் தாக்கத்திலிருந்து, நம்மை தற்காத்து கொள்வதாகவே கடந்து போனது. மனிதர்கள் பெருமளவில் இந்த கொடிய தொற்றுக்கு ஆளாகி, தங்கள் உயிரை இழந்து, தங்களின் அன்பான குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தி, தவிக்க விட்டுச் சென்றுள்ளனர்.

வந்திருக்க இயலாது
அவர்களின் குடும்பங்கள் வலியிலிருந்து மீண்டு நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். இன்னொரு புறம் கொரோனா முன்கள பணியாளர்கள் கடும் உழைப்பை தந்து, இந்த கொடிய காலத்தில் நம்மை பாதுகாத்திருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் இந்த கொடிய காலத்தை அமைதியான வழியில் நாம் கடந்து வந்திருக்க இயலாது.

தடைகளை தாண்டி
கடும் மன உறுதியுடன், மனிதம் காக்க போராடிய அந்த வீரர்கள் அனைவரையும் இந்த தருணத்தில் வணங்குகிறேன். மஹா படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிக்கப்பட்டு விட்டது. பல தடைகளை தாண்டி நீடித்த, இந்த படப்பிடிப்பில், பங்குகொண்ட படக்குழுவினர் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள்.

முழுதாக கடைப்பிடித்து
அரசின் அனைத்து வழிகாட்டுதல் நடைமுறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் முழுதாக கடைப்பிடித்தே படப்பிடிப்பை நடத்தினோம். இயக்குநர் ஜமீல், தயாரிப்பாளர்கள் மதியழகன், டத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் அனைவருக்கும் நன்றி.

சிம்புவிற்கு நன்றி
கோடை காலத்தில் படத்தை வெளியிட இருக்கிறார்கள். இதில் ஒரு பாத்திரமாக பங்கு கொள்ள ஒப்புக்கொண்ட நடிகர் சிம்புவிற்கு நன்றி. படத்தில் அவரின் பகுதிகளை ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள். ஶ்ரீகாந்த் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இவ்வாறு நடிகை ஹன்சிகா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











