நயன்தாரா இடத்தை பிடித்தாரா திரிஷா.. மார்க்கெட் இழந்த போதும் குறையாத நம்பிக்கை!
சென்னை: நடிகை திரிஷாவின் திரையுலக வாழ்க்கையில் சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அடுத்தடுத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய அஜித் படங்களிலும் திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். விஜய்யுடன் லியோ படத்தில் நடித்தார். தற்போது கமல்ஹாசன், சிம்பு ஆகியோருடன் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா என்ற தெலுங்கு படமும் உருவாகி வருகிறது.
நயன்தாராவுக்கு இருந்த மார்க்கெட் தற்போது திரிஷாவுக்கு வந்துள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. நயன்தாரா திரையுலகில் உச்சத்தில் இருந்தபோது திரிஷாவுக்கு சற்று இறங்கு முகம் இருந்தது. ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம், சரிந்து கொண்டிருந்த திரிஷாவின் திரை வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுத்தது. குந்தவை கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது, அதன் பிறகு நடிகைக்கு ஏறுமுகம்தான்.

நடிகை திரிஷா: திரிஷா தனது திரை வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைப் பார்த்து இருக்கிறார். பல தோல்விகள் வந்தபோதும் துவண்டு போகாமல் தன்னம்பிக்கையுடன் இருந்தார். மாடலிங் துறையில் இருந்துதான் திரிஷா திரைப்படங்களில் நடிக்க வந்தார். மிஸ் சேலம், மிஸ் சென்னை போன்ற அழகுப் போட்டிகளில் வெற்றி பெற்ற திரிஷா, 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதையும் வென்றார். சிம்ரன், பிரசாந்த் நடித்த ஜோடி திரைப்படத்தில் துணை நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். அப்போது சிம்ரன் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருந்தார். சில வருடங்களிலேயே அந்த இடத்தை திரிஷா பிடித்தார்.
அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை: 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் திரிஷா தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் ஒரு கலக்கு கலக்கினார். அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார். தமிழில் விஜய், அஜித் ஆகியோருடன் சிறந்த ஜோடியாக பெயர் பெற்றார். அதே நேரத்தில் தெலுங்கில் மகேஷ் பாபு, பிரபாஸ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தினார். 2004-ம் ஆண்டு திரிஷாவின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டாக அமைந்தது. விஜய்யுடன் அவர் நடித்த கில்லி திரைப்படம் அந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே ஆண்டில் வர்ஷம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். பிரபாஸ் கதாநாயகனாக நடித்த அந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக திரிஷா மாறினார்.
பின்னடைவு: திரை வாழ்க்கையின் ஆரம்பத்தில் கிடைத்த வரவேற்ப்பு அடுத்து, பத்து வருடங்களுக்கு பிறகு கிடைக்காமல் திரிஷாவின் மார்க்கெட் சரியத் தொடங்கியது. மும்பையிலிருந்து பல புதுமுக நடிகைகளான தமன்னா, காஜல் அகர்வால், ஹன்சிகா மோத்வானி போன்ற நடிகைகள் திரிஷாவின் இடத்தை பிடித்தனர். அந்த மோசமான காலகட்டத்தில் திரிஷாவிற்கு கை கொடுத்தது விண்ணைத்தாண்டி வருவாயா படம் மட்டுமே. இப்படம் ஒரு எவர்க்ரீன் காதல் காவியமாக மாறியது.
நான் தான் நம்பர் ஒன்: தனது இடத்தை மற்ற நடிகைகள் பிடித்தது குறித்து திரிஷா ஒருமுறை மனம் திறந்து பேசி இருந்தார். "என் திரை வாழ்க்கையில் மார்க்கெட் சரிந்து இருந்தபோதுதான் விண்ணைத்தாண்டி வருவாயா படம் எனக்கு வந்தது. என்னை உற்சாகப்படுத்தும் விதமாக எதுவும் நடக்கவில்லை. எனக்கு போட்டியாக நடிகைகள் வந்ததால் என் மார்க்கெட் சரிந்தது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவர்கள் எனக்கு போட்டியாக இருந்ததாக சொல்ல மாட்டேன். ஏனென்றால், நான் நல்ல படங்களில் நடித்துக் கொண்டு தான் இருந்தேன். நான் தான் நம்பர் ஒன் நடிகை என்ற கர்வம் இருந்தது. ஏனென்றால், நிறைய பேர் வந்தார்கள், போனார்கள். என்ன நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை. நான் தான் எல்லாம் என நினைத்துக் கொண்டிருந்தேன். பின்னர், என் இடத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதுதான் இந்த துறையின் வளர்ச்சி. இப்போது நான் அவர்களை என் போட்டியாளர்களாக பார்க்கவில்லை. இன்று நான் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











