அட சாய் பல்லவியின் சம்பளம் இவ்வளவா?.. ஹிந்தியில் என்ட்ரி ஆனதும் மாஸ் காண்பிக்கிறாரே
சென்னை: பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் சாய் பல்லவி ஏற்றிருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை அடுத்து தமிழிலும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. இப்போது அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் ஹிந்தி படத்துக்காக வாங்கியிருப்பதாக ஒரு சம்பள தொகை சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டை சேர்ந்த கதாநாயகிகள் கிடைப்பது குறிஞ்சி பூ பூப்பது போன்றது. பல வருடங்களுக்கு ஒருமுறைதான் அப்படி ஒருவர் கிடைப்பார். அந்தவகையில் கிடைத்தவர்தான் சாய் பல்லவி. இயற்கை அழகில் கொஞ்சும் நீலகிரியில் பிறந்ததால் என்னவோ இயற்கையான அழகோடு ஜொலிப்பவர். கோயம்புத்தூரில் படித்த சாய் பல்லவி ஜார்ஜியாவில் மருத்துவம் படித்தவர். மருத்துவராக மாற வேண்டும் என்பதுதான் அவரது ஆசை.

நடனசாய் பல்லவி: மருத்துவத்தின் மீது அவருக்கு எப்படி ஆர்வம் இருந்ததோ அதே ஆர்வம் நடனத்தின் மீதும் இருந்தது. அதன் காரணமாக தனது தாயின் மூலம் நடனத்தை கற்றுக்கொண்டார். தொடர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தவருக்கு சேனல் ஒன்றில் நடந்த நடன போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அந்த அரங்கத்தில் ஆடிய ஒவ்வொரு நடனத்தின் அசைவும் அனைவரையும் கவர்ந்தது.
சினிமா என்ட்ரி: நாம் நினைக்காததை நடத்தி காண்பிப்பதுதானே வாழ்க்கை. அதுபோல்தான் சாய் பல்லவிக்கும் நடந்தது. தாம் தூம் படத்தில் ஒரு சில நொடிகள் தலை காண்பித்தவருக்கு ஹீரோயின் ஆக வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. ஆனால் அவருக்கு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரேமம் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
மனதை திருடிய மலர் டீச்சர்: முதல் படத்தில் அலட்டல் இல்லாத அழகுடன் அவரது இயல்பான முக பாவனைகளும், நடிப்பும் மலர் டீச்சரை பார்த்த ஒவ்வொரு ரசிகரும் தங்களது நெஞ்சத்தில் குத்தி வைத்துக்கொண்டனர். பிரேமம் படத்தில் அவரது நடிப்பை பார்த்தால் நடிப்பின் மீது ஆர்வம் இல்லாதவரா இப்படி நடிக்கிறார் என்ற கேள்வி அனைவரிடமும் எழும். அந்த அளவுக்கு பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.
எதார்த்த அழகுதான் பிடிக்கும்: ஹீரோயின் என்றாலே மேக்கப்புகளை அள்ளி பூசிக்கொண்டு, வித விதமான உடையை அணிந்துகொண்டு, வழவழப்பான மரு இல்லாத கன்னங்களுடன் வலம் வர வேண்டும் என ஒரு விதி இருந்தது. அதை உடைத்ததில் பெரும் பங்கு சாய் பல்லவிக்கு உண்டு. அவரை பார்த்தால் நம்மிலிருந்து ஒரு பெண் நடிக்க சென்றிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பார். நிகழ்ச்சிகளுக்கு வந்தால் திகட்டாத மேக்கப், கவர்ச்சி உடைகள் என எதையும் அணிந்துகொள்ளாமல் வெகு இயல்பாக தோன்றுவதாலேயே ரசிகர்கள் சாய் பல்லவியை தங்கள் வீட்டு பெண்ணாக நினைக்க தொடங்கியிருக்கின்றனர்.
பிஸி சாய் பல்லவி: அவர் தற்போது பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழில் அவர் கடைசியாக நடித்த கார்கி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்போது அவர் சிவகார்த்திகேயனுடன் அமரன், தெலுங்கில் தண்டல் உள்ளிட்ட படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதுவரை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மட்டும் நடித்துவந்த சாய் பல்லவி ஹிந்தியிலும் காலடி வைத்திருக்கிறார்.
ஹிந்தி எண்ட்ரி: அந்தவகையில் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் நடிக்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அந்தப் படம் தவிர்த்து ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகும் படத்தில் ரன்பீர் கபூர் ராமனாக நடிக்க சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார். அதேபோல் கேஜிஎஃப் புகழ் யஷ் அந்தப் படத்தில் ராவணனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பளம்: இந்நிலையில் அந்தப் படத்துக்காக சாய் பல்லவியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் 10 கோடி ரூபாயை சம்பளமாக பெறுகிறாராம். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானும், ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹேன்ஸ் ஜிம்மரும் இணைந்து இசையமைக்கவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











