சம்பளத்தில் கைவைப்பதாகச் சொன்னதும் அத்தனை நிகழ்வுகளுக்கும் தவறாமல் ஆஜராகும் ஹீரோயின்கள்!
சென்னை: சமீப நாட்களாக கோடம்பாக்கத்தில் நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளிலும் தவறாமல் ஆஜராகிவிடுகின்றனர் சம்பந்தப்பட்ட படங்களின் நாயகிகள்.
காரணம் தயாரிப்பாளர்கள் எடுத்த 'சம்பள கட்' ஆயுதம்.
சில மாதங்களுக்கு முன்பு வரைகூட ஹீரோயின்கள் வராதது குறித்து தயாரிப்பாளர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
ஆனால் ஹீரோயின்கள் வந்தால்தான் மீடியாக்காரர்கள் போட்டி போட்டுக் கொண்டு படங்களை எடுப்பார்கள்... பக்கம் பக்கமாக பப்ளிஷ் பண்ணுவார்கள் என்றெல்லாம் தயாரிப்பாளர்களுக்கு சிலர் ஏத்திவிட, அவர்கள் ஹீரோயின் வந்தால்தான் ஆச்சு என அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

விஷயம் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போனது. அவர்கள்தான், படத்தின் நிகழ்ச்சிகளுக்கு வராவிட்டால் 20 சதவீத சம்பளம் கட் என மிரட்ட, வேறு வழியின்றி அனைத்து விழாக்களுக்கும் தவறாமல் இப்போது வர ஆரம்பித்துள்ளனர் கதாநாயகிகள்.
தான் அறிமுகமான முதல் படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு தவிர வேறு படங்களின் நிகழ்ச்சிகளுக்கு வந்தேயிராத பூர்ணா, இப்போதுதான் மீண்டும் ஒரு விழாவுக்கு வந்தார். அதுதான் தகராறு படத்தின் அறிமுக விழா.
முன்னணி நடிகையான அனுஷ்கா பெரும்பாலான விழாக்களுக்கு வரவே மாட்டார். ஆனால் முதல் முறையாக இரண்டாம் உலகம் படத்தின் பிரஸ் மீட்டுக்கு ஹைதராபாதிலிருந்து வந்திருந்தார்.
என்றென்றும் புன்னகை படத்தின் இசை வெளியீட்டுக்கு அப்படத்தின் நாயகிகள் த்ரிஷா, ஆன்ட்ரியா இருவருமே வந்து ஆச்சர்யப்படுத்தினார்கள்.
தயாரிப்பாளர்களுக்கும் இப்போது சந்தோஷம்... புகைப்படக்காரர்களின் காமிராக்களுக்கோ பரம சந்தோஷம்!


Click it and Unblock the Notifications











