த்ரிஷா செய்ததை சத்தியமா என்னால் செய்ய முடியாது: ஐஸ்வர்யா ராஜேஷ்
Recommended Video

சென்னை: சாமி படத்தில் த்ரிஷா செய்ததை சத்தியமாக என்னால் செய்ய முடியாது என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
சாமி படத்தில் வந்த மாமி த்ரிஷா மிகவும் பிரபலமானார். சில பிரச்சனையால் அவர் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து அவர் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா கூறியதாவது,

மாமி
சாமி படத்தில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் தான் நான் நடித்துள்ளேன். அந்த படத்தில் அவர் உருவாக்கிய மேஜிக்கை என்னால் கண்டிப்பாக உருவாக்கவே முடியாது. இதை நான் கூறியும் ஹரி சார் என் மீது நம்பிக்கை வைத்து நடிக்க வைத்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு சாமி படம் பார்த்து த்ரிஷாவை பார்த்து வியந்தேன். தற்போது அவரின் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்பதில் பெருமையாக உள்ளது.

கீர்த்தி
சின்ன கதாபாத்திரம் என்றாலும் நல்ல கதாபாத்திரம். நடிகையர் திலகம் படம் பார்த்துவிட்டு இது கீர்த்தியா, சாவித்ரி அம்மாவா என்று குழப்பம் ஏற்பட்டது. அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருந்தார். அனைத்து நடிகைகளையும் பெருமைப்படுத்திவிட்டார் கீர்த்தி. நான் கீர்த்தியின் ரசிகையாகிவிட்டேன்.

இரண்டாவது படம்
துருவ நட்சத்திரம் படத்தை அடுத்து சாமி ஸ்கொயர் படத்தில் விக்ரம் சாருடன் நடித்துள்ளேன். அவரை எனக்கு நன்றாக தெரியும். அதனால் சாமி ஷூட்டிங்கில் சவுகரியமாக இருந்தது. இந்த படத்தில் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. அதை எல்லாம் நான் சக்சஸ் மீட்டில் சொல்கிறேன். இது ஒரு வேகமான கமர்ஷியல் படம்.

அடையாளம்
நான் படத்தில் பார்க்க வேறு மாதிரியாகவும், நிஜத்தில் வேறு மாதிரியாகவும் இருப்பேன். அதனால் என்னை பலருக்கும் எளிதில் அடையாளம் காண முடியாது. நான் 22 படங்களில் நடித்துள்ளேன். ஆனால் சாமி ஸ்கொயர் அறிவிப்பு வந்த பிறகு மக்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டனர். மேடம் நீங்க சாமி 2 படத்தில் நடிக்கிறீர்கள் தானே என்று கேட்டார்கள். அந்த அளவுக்கு இது பெரிய படம் என்றார் ஐஸ்வர்யா.


Click it and Unblock the Notifications











