கேரளாவில் வாழ பயமா இருக்கு: மோகன்லால்

மலையாளம் சூப்பர்ஸ்டார் மோகன்லால் நேற்று முன்தினம் தனது 52வது பிறந்தநாளைக் கொண்டாடினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து விலகி தனி கட்சி தொடங்கிய சந்திரசேகரன் என்பவர் அண்மையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து மோகன்லால் தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது,
ஒரு மனிதரை ஒரு கும்பல் வெட்டிக் கொன்றது என்ற செய்தியைப் படித்த நான் எனது தாயின் கையைப் பிடித்துக் கொண்டு, அவர்களால் ஒரு சிறிய எறும்புக்காவது உயிரைக் கொடுக்க முடியுமா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். எனக்கு சிறு வலி என்றாலும் என் அம்மா எப்படி துடித்துப் போவார் என்பது எனக்கு தெரியும். அப்படி இருக்கையில் தனது மகனை யாரோ சிலர் வெட்டிக் கொன்றனர் என்பதை அறிந்து அந்த தாய் எவ்வளவு துடித்திருப்பார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
எனக்கு சந்திரசேகனை தெரியாது. ஆனால் அவர் தற்போது உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு என் வயது தான் இருக்கும். இது போன்ற கொலைகளுக்கு பின்னால் இருக்கும் அரசியலைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இது போன்ற இடத்தில் வாழ பயமாக உள்ளது. எனது தாய்க்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு சுயநினைவு வருவதும், போவதுமாக உள்ளது.
அவர் மட்டும் நன்றாக இருந்து இந்த கொலை சம்பவம் பற்றிய செய்தியை படித்திருந்தால் யாரோ என்னைத் தான் கொன்றுவிட்டார்கள் என்பது போல் கண்ணீர் விட்டிருப்பார். பிள்ளைகளை இழக்கும் துயரம் தாய்மார்களுக்கு மட்டும் தான் தெரியும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











