கமலின் மகளாக இருந்து கொண்டு இப்படி சொல்லலாமா?: ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த ஸ்ருதிஹாசன்!
சென்னை: கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் திரையுலகில் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்
14வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள ஸ்ருதிஹாசன், தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரது திரைபயணம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஸ்ருதிஹாசனின் இந்த வீடியோவில் பல சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

கமலின் வாரிசு
நட்சத்திர வாரிசாக திரையுலகில் அறிமுகமாகி, தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பன்மொழி திரைப்படங்களில் நடித்து பதிமூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். .கமல்ஹாசன் - சரிகா தம்பதிகளுக்கு மூத்த வாரிசாக பிறந்தவர் தான் இந்த ஸ்ருதிஹாசன்.

குழந்தை நட்சத்திரம் டூ ஹீரோயின்
கமல், ஷாருக்கான் இணைந்து நடித்த ஹேராம் படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார் ஸ்ருதிஹாசன். ஆனாலும், 2009ல் நடிகர் இம்ரான்கான் ஜோடியாக 'லக்' எனும் இந்திப் படத்தில் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த அவர், சூர்யாவுடன் 'ஏழாம் அறிவு' படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார். இதனை அடுத்து '3', 'பூஜை', 'புலி', 'வேதாளம்', 'சிங்கம் 3', 'லாபம்' ஆகிய படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார்,

13 ஆண்டுகள் நிறைவு
இந்நிலையில், திரையுலகில் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஸ்ருதிஹாசன், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். காணொளி வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ள அவர், திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி பதிமூன்று ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டேன் எனக் கூறியுள்ளார். ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் தன் வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிப்பேன் எனவும், படப்பிடிப்புத் தளத்தில் பணியாற்றிக் கொண்டே, இந்த 13 ஆண்டுகள் நிறைவை உற்சாகத்துடன் கொண்டாடுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

ஒருபோதும் நினைக்கவில்லை
தன்னுடைய திரையுலக வாழ்க்கை மாயாஜாலங்கள் நிறைந்தது. படங்களில் நடிப்பேன் என தான் ஒருபோதும் நினைக்கவில்லை. ஏதேனும் தனக்கு விருப்பமான துறையில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் தன்னுடைய கனவாக இருந்தது. அதேநேரம் தனக்கு விருப்பமான வேலையை எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டேன் எனக் கூறியுள்ளார்.

வெற்றி தோல்வி
வெற்றி, தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும், நம்பிக்கையுடன் எப்படி பணியாற்றுவது என்பதையும், கதைகளை கேட்பதிலும், அதனை தேர்ந்தெடுப்பதிலும் அதிலுள்ள நேர்மறையான விசயங்களை பாராட்டுவது எப்படி எனவும் தான் கற்றுக்கொண்டேன். தனக்கு கிடைத்துவரும் அன்புக்கும் பாராட்டிற்கும் மிகவும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். பதிமூன்று ஆண்டுகளாக தன் மீது மாறாத அன்புகாட்டி வரும் அனைவருக்கும் தன்னுடைய பணிவான நன்றி... நன்றி... நன்றி.. என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து.
ஸ்ருதிஹாசன் நன்றி தெரிவித்துள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், அவரது திரைப்பயணம் மேலும் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது பிரபாஸுடன் 'சலார்' படத்திலும், மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 'வால்டர் வீரய்யா' திரைப்படத்திலும், பாலகிருஷ்ணா நடித்துவரும் பெயரிடப்படாத புதிய படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











