உருவகேலி செய்த ஊர்வசி.. குமரிமுத்து சொன்ன ஒத்தை வார்த்தை.. உடைந்துபோய் அழுதுட்டாங்களாம்
சென்னை: நடிகை ஊர்வசி இப்போது தமிழில் பரிமளா&கோ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதில் ஜெயராம், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோரும் நடிக்க; பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். விரைவில் படமானது ரிலீஸாகவிருக்கிறது. ரிலீஸ் நெருங்கிவிட்டதால் ப்ரோமோஷன் பணிகளும் சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் ஒரு ப்ரோமோஷனில் கலந்துகொண்ட ஊர்வசி; குமரிமுத்து குறித்து பேசியிருப்பது ரசிகர்களை கலங்க செய்திருக்கிறது.
தமிழில் பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு திரைப்படத்தின் வாயிலாக கோலிவுட்டுக்கு வந்த ஊர்வசி; குறுகிய காலத்திலேயே பெரிய நடிகையாக வளர்ந்தார். அழகு மட்டுமின்றி நடிப்பு திறமையும் கொண்டிருந்த அவர் கமலுக்கு ஜோடியாக மைக்கேல் மதன காம ராஜன் திரைப்படத்தில் அட்டகாசமான நடிகையாக ஜொலித்தார். தொடர்ந்து பல ஹீரோக்களுக்கு ஜோடி போட்ட அவர்; மலையாளத்திலும் செம பிஸியான நடிகை. ஒருகட்டத்தில் ஹீரோயின் வாய்ப்பு குறைய கேரக்டர் ரோல்களுக்கு மாறினார். அதுவும் சமீபத்தில் அவர் ஏற்கும் கேரக்டர்கள் எல்லாம் டாப் கிளாஸாக இருக்கின்றன.

பரிமளா&கோ: இப்போது அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் பரிமளா&கோ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் ஜெயராம் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படமும் ஊர்வசிக்கு சூப்பர் பெயரை பெற்றுக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்த ஊர்வசி; நடிகர் குமரிமுத்து குறித்து பேசியிருக்கும் விஷயம் அனைவரையும் கலங்க செய்திருக்கிறது.
ஊர்வசி பேட்டி: அந்தப் பேட்டியில் அவர், "உருவகேலி செய்வதற்கு இன்றாவது கொஞ்சம் தயங்குகிறார்கள். ஆனால் ஒரு காலத்தில் ரொம்ப சகஜமாகவே அதை செய்துகொண்டிருந்தார்கள். குண்டாக இருந்தால் தடியன், நடை ஒரு மாதிரி இருந்தால் அதை வைத்து பெயர் சொல்லி அழைப்பது என இருப்பார்கள். நிறைய நடிகர்களின் மனைவிகள் நடந்து போகும்போது தங்களது உடலை மறைத்துக்கொள்வார்கள். முன்பெல்லாம் எனக்கு உருவகேலி செய்வது தவறு என்றே தெரியாது. மற்றவர்கள் கேலி செய்வார்கள். நானும் சிரித்துவிடுவேன்.
குமரிமுத்து பற்றி: ஒரு படத்தில் குமரிமுத்து அண்ணனுடன் நடித்தேன். அவரை போன்றே கண்களை வைத்து என்னை நடிக்க சொன்னார்கள். நானும் அப்படி நடித்தேன். ஷாட் முடிந்ததும் எல்லோரும் கைகளை தட்டி சிரித்தார்கள். அதற்கு பிறகு குமரிமுத்துவை ஒருமுறை பேட்டி எடுத்தேன். அந்தப் பேட்டியில் அவருடைய சின்ன வயது ஆசைகள் குறித்து கேட்டேன். அதற்கு அவரோ, 'நன்றாக படிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் படிக்க முடியவில்லை. போலீஸாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்த கண்களால் அந்த வேலை கிடைக்கவில்லை.
எல்லோரும் சொன்னார்கள்: டிரைவிங் கற்றுக்கொள்ள சென்றபோது கண்ணு ஒழுங்காக இருப்பவர்களே சரியாக ஓட்ட முடியவில்லை. நீ இப்படி ஒன்னரை கண்ணை வைத்துக்கொண்டு வந்திருக்கியே என்று கேட்டார்கள் என சொன்னார். இப்படி சொல்லிக்கொண்டே வந்தவர், நீ கூட ஒரு படத்தில் என்னை மாதிரி கண் வைத்து நடித்தாய் என்று சொல்லிவிட்டார். எனக்கு ஒரு மாதிரி ஆகி நான் வெளியே போய் அழுதுவிட்டேன். மேலும், அந்தப் பேட்டியின்போது, 'இந்த கண்கள்தான் இப்போ எனக்கு சோறு போடுது' என சொன்னார். அப்போதிருந்து இனி ஒருபோதும் யாரையும் உருவகேலி செய்யக்கூடாது என்று முடிவு செய்து அப்படியே நடந்துவருகிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications
