பிரசவம் வரைக்கும்தான் பெண்களுக்கு மரியாதை... ஐஸ்வர்யா ராய் குமுறல்
சென்னை: ஒரு பெண் கர்ப்பிணியாக இருக்கும் போது அவளை விழுந்து விழுந்து கவனிக்கும் குடும்பம், பிரசவத்திற்குப் பின்னர் அந்தப் பெண்ணை புறக்கணிக்கின்றனர் என்று நடிகை ஐஸ்வர்யா ராய் குற்றம் சாட்டியுள்ளார்.
பெண்களுக்கு சரியான ஊட்டச்சத்துணவு கிடைக்காமல் போவதால் பேறுகால மரணங்கள் இந்தியாவில் அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற 58 வது அகில இந்திய மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர்கள் கூட்டமைப்புகளின் மாநாட்டின் ஒருபகுதியாக ஸ்டெம் செல் பற்றிய கருத்தாய்வு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யாராய் கலந்து கொண்டார்
நீல நிற உடையில் அழகு தேவதையாய் வந்த ஐஸ்வர்யாவைக் கண்ட பார்வையாளர்கள் சில நிமிடங்கள் மெய்மறந்துதான் போனார்கள். அழகாய் இருப்பவர்கள் அறிவாளியாய் இருக்கமாட்டார்கள் என்று யார் சொன்னது?. தாய்க்கும் சேய்க்கும் உள்ள பந்தம் பற்றியும், முன்னாள் உலக அழகி பேசப் பேச மெய் மறந்து கேட்டது கூட்டம்.

தொப்புள் கொடி பந்தம்
தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள தொப்புள்கொடி பந்தம், குழந்தை பிறக்கும் அந்த நிமிடத்தோடு நின்று விடக்கூடியது கிடையாது. அது அந்தக் குழந்தையின் வாழ்க்கை முழுக்கவும் பயன்படக்கூடியது.

ஸ்டெம்செல்
இதயப் பிரச்னை, சிறுநீரகம் செயலிழப்பு என உங்கள் குழந்தையின் எந்த விதமான நோய்க்கும் இந்த ஸ்டெம் செல்களைப் பாதுகாத்து வைப்பதன் மூலம் தீர்வு காண முடியும்.

மக்களுக்கு விழிப்புணர்வு
ஆனால் இந்த ஸ்டெம் செல் தெரப்பியை பற்றி இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும் தெரியுமா என்றால் அது கேள்விக்குறிதான். எந்த ஒரு தகவலும் நம்பிக்கையான நபரிடமிருந்து வரும்போது அதை நம்புபவர்களும் அதிகளவில் இருப்பார்கள்.
எனவே இந்த மருத்துவத்தின் அவசியத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டியது பொறுப்பு ஊடகங்களுக்கு அதிகம் உள்ளது.

ஆரோக்கியமான சமுதாயம்
அனைத்து மகப்பேறு மருத்துவர்களும் தங்களிடம் பிரசவத்துக்காக வரும் தாய்மார்களுக்கு இந்த ஸ்டெம் செல் முறையைப் பற்றி கூறி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவேண்டும்.

பிரசவ மரணங்கள்
இந்தியாவில் சமீபகாலமாக தொடரும் பேறுகால மரணங்கள் குறித்துப் பேசுகையில், ஒரு பெண்ணுக்கு உண்டான எந்த அத்தியாவசிய தேவைகளையும் இந்த சமூகமும் சரி, குடும்பமும் சரி நிறைவேற்றுவதே இல்லை.

பெண்கள் புறக்கணிப்பு
குழந்தை பிறக்கும் வரை ஒரு பெண்ணை கவனிப்பவர்கள், குழந்தை பிறந்தவுடன் அந்தக் கொண்டாட்டத்திலேயே அந்தப் பெண்ணைப் பற்றி மறந்துவிடுகிறார்கள்.

ஊட்டச்சத்து உணவு
கர்ப்பக் காலங்களில் உடலளவிலும் சரி, மனதளவிலும் சரி பெண்ணுக்கு தேவையான எதுவுமே சரியாகக் கிடைப்பதில்லை.
பிரசவக் காலங்களில் போதுமான ஊட்டச்சத்து கிடைக்காததாலும், முறையான மருத்துவ பரிசோதனைகள் இல்லாத காரணத்தாலும்தான் இன்றும் இந்தியாவில் பல கர்ப்பக்கால மரணங்கள் தொடர்கின்றன.

தாய்மார்களின் மரணம்
இந்தப் பூமிக்கு மேலே ஓர் உயிர் உதித்த மறுகணமே, அலட்சியத்தால் உயிர் பறிக்கப்பட்ட பல பெண்களின் உடல்கள் பூமிக்கு அடியில் செல்கின்றன.
இதை எல்லாம் தடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு பெண்ணையும் உங்கள் சொத்தாக நினைத்து பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

தாய்மையின் அக்கறை
உலக அழகியாக இருந்தாலும் தானும் ஒரு தாய்தான் என்பதை மறக்காமல் அக்கறையோடு, அன்போடு பேசினார் ஐஸ்வர்யா.


Click it and Unblock the Notifications











