ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணத்தில் கிலோ கணக்கில் தங்கம்.. தலையே சுத்துது.. இவ்வளவு பிரமாண்டமா?
சென்னை: ராஷ்மிகா மந்தனாவுக்கும், விஜய் தேவரகொண்டவுக்கும் நேற்று முன்தினம் உதய்பூரில் திருமணம் நடைபெற்றது. இதில் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். மார்ச் நான்காம் தேதி ஹைதராபாத்தில் நடக்கவிருக்கும் ரிசப்ஷனில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இந்நிலையில் திருமணத்தின்போது இரண்டு பேரும் அணிந்திருந்த தங்க நகைகள் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்திய அளவில் பிரபலமாக இருப்பவர்கள் ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா. அவர்கள் இரண்டு பேரும் சில படங்களில் சேர்ந்து நடித்தபோது காதலிக்க தொடங்கினார்கள். அவர்களது காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்ததால் கடந்த வருடத்தில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டு பிப்ரவரி 27ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள். இந்தத் திருமணத்துக்கு பிரபலங்கள் யாரையும் அழைக்க வேண்டாம் எனவும்; ரிசப்ஷனுக்கு அழைத்துக்கொள்ளலாம் எனவும் முடிவு செய்திருந்தார்கள்.

உதய்பூரில் நடந்த திருமணம்: அதன்படி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஆரவல்லி மலைத்தொடர்களுக்கு மத்தியில் இருக்கும் ஐடிசி மெமண்டோஸ் மாளிகையில் திருமணம் நேற்று முன்தினம் நடந்தது. தெலுங்கு மற்றும் கொடவா முறைபடி இரண்டு முறை திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்னதாக இரண்டு நாட்கள் ஹல்தி, மெஹந்தி, சங்கீத் ஆகிய நிகழ்ச்சிகளும் களைகட்டின. தனது கழுத்தில் விஜய் தேவரகொண்டா தாலி கட்டியபோது ஆனந்த கண்ணீர் வடித்தார் நேஷனல் க்ரஷ். குடும்பத்தினர் பரிபூரண ஆசீர்வாதத்தை வழங்கினார்கள். ரசிகர்களும் சோஷியல் மீடியா மூலம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.
அணிந்திருந்த நகைகள் விவரம்: இந்நிலையில் திருமணத்தின்போது இரண்டு பேரும் அணிந்திருந்த தங்க நகைகள் குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர்கள் அணிந்திருந்த நகைகள் சுமார் பத்து மாதங்களாக கைகளாலேயே தயாரிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று கிலோ தூய தங்கத்தை பயன்படுத்தி இந்த நகைகளை செய்திருக்கிறார்கள். இந்த நகைகள் தென்னிந்திய கோயில் கட்டடக்கலையால் ஈர்க்கப்பட்டு பாரம்பரிய முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.
மொத்தம் 11 நகைகள்: ராஷ்மிகா மந்தனா தனது உடலில் மொத்தம் 11 நகைகளை பிரமாண்டமாக அணிந்திருந்தார். பல அடுக்குகள் கொண்ட ஆரம், கழுத்தில் போடப்படும் கனமான சோக்கர், ஒட்டியானம், மூக்குத்தி, வளையல்கள், நெத்தி சுட்டி, உள்ளிட்டவை இதில் அடங்கும். இவை அனைத்திலுமே கோயில் சிற்பங்கள் ரொம்ப ரொம்ப நுணுக்கமாகவும், துல்லியமாகவும் இடம்பெற்றிருந்தது அனைவரையுமே ஈர்த்திருக்கிறது.
விஜய் தேவரகொண்டா அணிந்திருந்தது: விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவுக்கு இணையாக தங்க நகைகளை அணிந்திருந்தார். கனமான நெக்லஸ்களு, ராஜா காலத்தில் போடப்படுவது போன்ற பெரிய காதணிகள், கை வளையல்கள், காலணிகள் இடம்பெற்றிருந்தன. அத்தனையும் விழா காலத்தில் அரசர் எப்படி இருப்பாரோ அப்படி விஜய்யை காண்பித்தது. மேலும் அவற்றில் யானை மற்றும் புலி உருவங்கள் நுணுக்கமாக பொறிக்கப்பட்டிருந்தன.
அணிந்திருந்த ஆடைகள்: இவர்களுக்கான திருமண ஆடைகளை அனாமிகா கண்ணா உருவாக்கியிருந்தார். நகைகளுக்கு பொருத்தமாக இந்த உடைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. ராஷ்மிகா அணிந்திருந்த தங்க நிற பட்டு புடவையிலும் கோயில் சின்னங்கள் பிரதிபலித்தன. ராஷ்மிகா மந்தனா ஐவரி வேட்டி மற்றும் செம்மஞ்சள் அங்கவஸ்தரம் அணிந்திருந்தார். லெஹந்காக்களும், வைர நகைகளும் திருமணத்தை ஆக்கிரமிக்கும் இந்தக் காலத்தில் இவர்கள் பாரம்பரிய சின்னங்களை குறிக்கும் வகையில் ஆடைகள், நகைகளை தேர்ந்தெடுத்தது அனைவரிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications











