எனக்கு நயன்தாரா வேண்டும்.. திருமணம் செய்து வைப்பீர்களா?.. அதிமுக முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு
விழுப்புரம்: தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று விழுப்புரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய அவர் நடிகை நயன்தாரா பற்றி பேசியிருக்கும் விஷயம் சர்ச்சையையும், கண்டனத்தையும் சந்தித்திருக்கிறது. ரசிகர்கள் சண்முகத்தை விளாசிவருகிறார்கள்.
நயன்தாரா தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்; வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களையும் பெற்றார். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்துவருகிறார். அவரது கைகளில் இப்போது டாக்சிக், மண்ணாங்கட்டி, ராக்காயி, ஹாய் உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. இத்தனை வருடங்களாகியும் லைம் லைட்டில் இருக்கும் அவரை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமும் ஆச்சரியம்தான் படுகிறது.

ஓய்ந்த சர்ச்சைகள்: நயன்தாரா என்றாலே ஒருகாலத்தில் சர்ச்சை என்றே இருந்தது. முதலில் சிம்புவை காதலித்து பிரேக் அப் செய்தார். பிறகு இயக்குநரும், நடிகரும், நடன அமைப்பாளருமான பிரபுதேவாவை தீவிரமாக காதலித்தார். அவருக்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கும் மாறினார். ஆனால் சில காரணங்களால் அந்த காதலும் முறிந்தது. இப்படி இரண்டு காதல்கள் அவரது வாழ்க்கையில் பாதியிலேயே முடிந்து போயிருக்கின்றன. அதை வைத்து அவரது கேரக்டரையும் தரக்குறைவாக பலர் பேசினார்கள். சில வருடங்களுக்கு முன்புகூட தனுஷுடன் அவருக்கு ஏற்பட்ட மோதலில் அனைவருமே நயனை கடுமையாக விமர்சித்தார்கள். இப்படி தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்துவந்தார்.
நயனின் பதிலடி: ஆனால் அத்தனைக்கும் நயன்தாரா தனது வாயால் பதில் சொல்லாமல்; செயலால் பதிலடி கொடுத்தார். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள், நான் வளர்ந்துகொண்டே இருப்பேன் என சொல்லாமல் சொல்லி; அசுரத்தனமாக வளர்ந்தார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாடப்படுகிறார். இப்போதுதான் அவரை சுற்றி எந்த சர்ச்சையும், பஞ்சாயத்தும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் புதிய பஞ்சாயத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.
சண்முகம் பேச்சு: அதாவது திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக சார்பில் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், "அப்துல் கலாம் கனவு காணுங்கள் என சொன்னார். ஸ்டாலினோ ஒருபடி மேலே போய், உங்கள் கனவை சொல்லுங்கள் என கூறுகிறார். இவர் நிறைவேற்றுவாராம். ஆம் எனக்கு நயன்தாரா வேண்டும். அதை நிறைவேற்றுவீர்களா?.. இவர் (பக்கத்தில் இருப்பவரை கை காண்பித்து) நயன்தாராவை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என சொல்வார். அதை ஸ்டாலின் நிறைவேற்றுவாரா?" என்றார்.
நடிகைகள் என்றாலே இப்படித்தானா?: அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே அதிமுகவின் முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு, கூவத்தூர் ரெசார்ட்டுக்கு திரிஷா வந்து சென்றார் என பெரிய குண்டை தூக்கி போட்டார். அது வலுவான கண்டனங்களை பெற்றது. இப்போது சண்முகமும் இப்படி தரக்குறைவாக பேசியதை பார்த்த ரசிகர்கள், நடிகைகள் என்றாலே உங்கள் பார்வையில் மட்டம்தானா?. உங்கள் சிந்தனை எப்போது மாறுமோ என்று கமெண்ட்ஸ் செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications















