தென்னிந்திய ரசிகர்கள் ஹிந்தி படங்களை பார்ப்பதில்லை.. கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.. ஜோதிகா ஓபன் டாக்
மும்பை: நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா இடையில் சில காலம் சினிமாவிலிருந்து ரெஸ்ட் எடுத்திருந்தார். பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்த அவர் இப்போது பாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்தார். அந்தவகையில் அவர் கடைசியாக ஸ்ரீகாந்த் படத்தில் நடித்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பையே பெற்றது. இந்தச் சூழலில் ஜோதிகா சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
ஜோதிகா 90களில் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். க்யூட் எக்ஸ்பிரெஷன், பப்ளி தோற்றம் என தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்தார். எந்தக் கதாபாத்திரத்தை ஏற்றாலும் அதுவாகவே மாறி தனது நடிப்பு, எக்ஸ்பிரெஷன், பாடி லாங்குவேஜ் என அனைத்திலும் கலக்கக்கூடியவர். விஜய், அஜித், கமல் ஹாசன், விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டவர்.

சந்திரமுகி, மொழி: ஆரம்பத்தில் கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த அவர் காலம் செல்ல செல்ல நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அந்தவகையில் அவர் நடித்த மொழி, சந்திரமுகி ஆகிய இரண்டு படங்களுமே அவரது கரியரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. மொழியில் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக கலங்கடித்திருந்த அவர், சந்திரமுகியில் ரஜினியை தாண்டி ஸ்கோர் செய்து அதகளம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவுடன் திருமணம்: இதற்கிடையே பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யாவுடன் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். ஆனால் இவர்களது காதலுக்கு சிவக்குமார் ஆரம்பத்தில் ஒத்துக்கொள்ளவில்லை. அதற்கு பிறகு வீட்டு சம்மதத்துக்காக பல வருடங்கள் இரண்டு பேரும் காத்திருந்து திருமணம் செய்துகொண்டனர். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக இப்போது வலம் வரும் அவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கிறார்கள்.
பிஸி ஜோதிகா: திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர் 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து ராட்சசி, உடன்பிறப்பே என ஏகப்பட்ட படங்களில் நடித்த அவர் இப்போது பாலிவுட்டில் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் ஷைத்தான் படம் வெளியானது. அதனையடுத்து ஸ்ரீகாந்த் படம் வெளியானது. அந்தப் படமும் நல்ல வரவேற்பையே பெற்றது.
ஜோதிகா பேட்டி: இந்நிலையில் ஜோதிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "பாலிவுட்டில் 25 வருடங்களாக எந்த சத்தமும் இல்லாமல் இருந்தேன். ஆனால் இப்போது எனக்கு பாலிவுட்டில் இப்படி வரவேற்பு கிடைக்கும் என்ற நான் எதிர்பார்க்கவில்லை. சர்ப்ரைஸாக இருக்கிறது. எனக்கு ஏற்ற மாதிரியான கதை எதுவும் அமையவில்லை என்பதால்தான் பாலிவுட்டில் நடிக்காமல் இருந்தேன்.
பிரித்து பார்க்க வேண்டாம்: நல்ல கதை இருந்தால் கண்டிப்பாக பாலிவுட், கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் நடிப்பேன். தென்னிந்திய - வட இந்திய ரசிகர்கள் என இந்திய சினிமாவை பிரித்து பார்க்க வேண்டாம். தென்னியாவில் ஹிந்தி படங்களை அதிகமாக பார்க்கமாட்டார்கள். ஆனால் வட இந்தியாவிலோ தென்னிந்திய படங்களை அதிகம் பார்க்கிறார்கள். அதேபோல் வட இந்தியாவில் ரஜினிகாந்த் பற்றிய பதிவுகள் சோஷியல் மீடியாவில் நிறைய ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்திய சினிமாவில் இப்படி வித்தியாசங்கள் இருப்பது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது. வட இந்திய ரசிகர்கள், தென்னிந்திய ரசிகர்கள் என்று பிரியாமல் இந்திய ரசிகர்களாக அனைவரும் இருக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











