நயன்தாராவுக்கு வந்த வினை.. தன்னைத்தானே பெரிய ஆள்னு நினைக்கிறாங்க.. விளாசிய அந்தணன்
சென்னை: நடிகை நயன்தாராதான் கடந்த சில மாதங்களாகவே கோலிவுட்டில் அதிக சர்ச்சைகளை சந்தித்துவருகிறார். தனுஷுடனான மோதலில் ஆரம்பித்த அந்த சர்ச்சை பயணம் இப்போது ரஜினியிடம் வந்து நிற்கிறது. சந்திரமுகி படத்தில் நடித்தபோது ரஜினிகாந்த் எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் என்று தனக்கு தெரியவே தெரியாது என்று ஒரு பேட்டியில் பேசினார். அதனையடுத்து பலரும் நயனை வறுத்தெடுக்க தொடங்கிவிட்டார்கள். இந்தச் சூழலில் பத்திரிகையாளர் அந்தணன் நயன்தாராவை விளாசியிருக்கிறார்.
சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு பிரபுதேவாவை காதலித்தார் நயன்தாரா. ஆனால் அந்தக் காதலும் பாதியில் முடிந்தது. இதனால் விரக்தியடைந்த அவர் சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். ஒருவழியாக மீண்டும் சினிமாவுக்கு வந்த அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்தார். அப்படி அவர் நடித்த அறம், நானும் ரௌடிதான் உள்ளிட்ட படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுக்கொடுத்தன.

விக்னேஷ் சிவனுடன் காதல்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார் நயன். பிறகு அவருடன் லிவிங் டூ கெதரில் இருந்துவிட்டு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார். திருமணத்துக்கு பிறகும் பிஸியாக நடித்துவரும் அவர் தற்போது ஹிந்தியிலும் கால் பதித்திருக்கிறார். தமிழிலும் அவர் கைவசம் ஏராளமான படங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைகள்: நயன் என்றாலே சர்ச்சைகள் என்பதுதான் அவர் நடிக்க வந்ததிலிருந்து இருந்தது. திருமணத்துக்கு பிறகு கொஞ்சம் அது இல்லாமல் இருந்தது. ஆனால் சமீபமாக மீண்டும் அடிக்கடி சர்ச்சை வளையத்துக்குள் சிக்குகிறார் அவர். தன்னை பற்றிய ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் பட காட்சிகளை தனுஷின் சம்மதம் இல்லாமல் பயன்படுத்தியது பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. தனுஷோ நயன், விக்கி, நெட்ஃப்ளிக்ஸுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அடுத்த சர்ச்சை: இந்தப் பிரச்னை ஓய்வதற்குள் நயன் ஒரு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் மூன்று பத்திரிகையாளர்களை குரங்குகள் என்று தரக்குறைவாக பேசினார். அதனையடுத்து பலரும் நயனுக்கு எதிராக கொந்தளிக்க ஆரம்பித்தனர். அதே பேட்டியில் பேசிய அவர், சந்திரமுகி படத்தில் நடித்தபோது ரஜினிகாந்த் எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் என்றே எனக்கு தெரியாது. அதனால்தான் ஒழுங்காக நடிக்க முடிந்தது என்று கூறினார். அவரது இந்தப் பேச்சை கேட்ட பலரும் நயன்தாரா ஆணவத்தின் உச்சத்தில் இருக்கிறார் என்று ஓபனாக விமர்சனத்தை முன்வைத்தார்கள்.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பத்திரிகையாளர் அந்தணன் அளித்த பேட்டியில், "ரஜினிகாந்த்தை சந்திரமுகி படத்தின்போது தனக்கு தெரியாது என்று நயன்தாரா சொன்னதெல்லாம் சுத்த பேத்தல்தான். ரஜினியை தெரியாதவர்கள் இந்தியாவில் யாருமே இல்லை என்பதுதான் உண்மை. நயன்தாராவை பொறுத்தவரை தன்னை தானே பெரிய ஆள் என்று நினைத்துக்கொள்கிறார். அவருக்கு வினை வந்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது" என்றார். அந்தணனின் இந்தப் பேட்டி ரஜினி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டுவருகிறது.


Click it and Unblock the Notifications











