வாவ்... நம்ம ‘ஓவர் ஆக்டிங்’ ஜோதிகாவா இது!
சென்னை : ஜோதிகா என்றாலே குறும்புத்தனமான நடிப்பு என்பது தான் இதுவரை நமக்குத் தெரிந்த முகம். ஆனால், அதையும் தாண்டி ஜோதிகா எவ்வளவு பக்குவமானவர் என்பதை வெளிக்காட்டுவதாக இருந்தது அவர் பங்கேற்ற காபி வித் டிடி நிகழ்ச்சி.
திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஜோதிகா, கிட்டத்தட்ட 9 வருடங்களுக்குப் பிறகு நடிக்க வந்திருக்கிறார். தன் நிஜ வயதைப் பிரதிபலிப்பது போல, அவரது மறுபிரவேச படத்தின் பெயர் 36 வயதினிலே.
விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் ஜோதிகா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காபி வித் டிடி நிகழ்ச்சியில் இந்த வார சிறப்பு விருந்தினர் ஜோதிகா தான்.

வாடீ ராசாத்தி...
36 வயதினிலே பட டிரைலரோடு தான் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஜோதிகாவை அறிமுகப் படுத்தும் போது, டிடி ‘இந்த மலர்களைப் போல அழகானவர், இவரது வாழ்க்கை அழகானது' என்ற வரணனையோடு தான் ஆரம்பித்தார்.

அழகிய தமிழ் மகள்...
சேலையில் அட்டகாசமாக வந்தமர்ந்த ஜோதிகா சற்றும் மிகையில்லாமல் தன்னால் முடிந்தவரை தமிழில் பேசி நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். தான் பழகும் மனிதர்களை அவர் எந்தளவுக்கு மதிக்கிறார் என்பது அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்படையாகத் தெரிந்தது.

பிரியமான தோழி...
ஜோதிகா கட்டி வந்த சேலையில் அவரது நெருங்கிய தோழி வரைந்திருந்த மயில் ஓவியம் இருந்தது. அதைக் கேமராவில் காட்டத் தவறவில்லை ஜோ. அதேபோல் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய தனக்கு தன் தோழிகளின் ஆதரவு குறித்தும் விளக்கமாக பேசினார்.

வாழ்க்கை ஒரு வட்டம்...
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தன் தாயைப் புகழ்ந்து ஆரம்பித்தவர், நிகழ்ச்சியை முடிக்கையில் சூர்யாவோடு முடித்து தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களையும் அழகாக விவரித்தார். ஜோதிகாவின் பேச்சில் இருந்த நிதானம், தெளிவு, எதிர்கால சிந்தனை நிச்சயம் அவரது ரசிகர்களை ஆச்சர்யப் படுத்தி இருக்கும்.

சுய அடையாளம்...
பெண் என்பவளுக்கு அவளது பேருக்கு பின்னால் வரும் கணவரின் பெயரை வைத்து தான் சமூகத்தில் பெருமை, அங்கீகாரம் எல்லாம் கிடைக்கும் என்றாலும், அதற்கு முன்னால் உள்ள தனது பெயரை, சுய அடையாளத்தை இழந்து விடக் கூடாது என்பதை அவரது பேச்சு அழகாக வெளிப்படுத்தியது.

ஓவர் ஆக்டிங் தான்...
குஷி படத்தில் நடித்த போது தனக்குள் எஸ்.ஜே.சூர்யாவின் மேனரிசம் புகுந்து விட்டதையும், அது மெல்ல மெல்ல காக்க காக்க படத்தில் மறைந்து, மொழி படத்தில் தான் பக்குவப் பட்டதையும் வெளிப்படையாக அவர் பேசினார். சந்திரமுகியில் கூட தான் ஓவர் ஆக்டிங் செய்திருந்ததாக வெளிப்படையாகக் கூறினார்.

ஐ லவ் யூ சூர்யா...
தன் காதல் கணவர் குறித்த கேள்விக்கு, ‘சூர்வை ரெண்டு நாள் வீட்ல வச்சிருந்தீங்கன்னா, மூணாவது நாள் திரும்ப என்கிட்ட வந்து விட்டுட்டுப் போய்டுவீங்க' என நகைச்சுவையாக கூறினார். தான் சூர்யா மீது வைத்துள்ள காதலை அழகாக டிவியின் மூலம் வெளிப்படுத்தினார்.

பொறுப்பான அம்மா...
தன் மகள் தியாவின் புகைப்படத்தை விஜய் டிவியில் காட்டியபோது, அதைப் பார்த்து தன் மகளின் பெருமைகளைப் பேசியவர் மறக்காமல் தன் மகனைப் பற்றியும் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தன் மகனின் புகைப்படத்தைக் காட்டாததைச் சுட்டிக் காட்டிய ஜோதிகா, நிச்சயம் தேவ் இதைப் பத்தி கேட்பான், அக்காவைப் பத்தி மட்டும் பேசுனீங்களே என வருத்தப்படுவான் என பொறுப்பான அம்மாவாக தன்னை வெளிப்படுத்தினார்.

ஆண்களுக்கான படம்...
இறுதியாக தன்னுடைய 36 வயதினிலே படத்தைப் பார்த்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது பெண்களைப் பற்றிய ஆண்களுக்கான படம் என தெளிவாக தன்னுடைய படத்தை பற்றி அவரே விமர்சித்தார்.

36 வயதினிலே... பெருமை தான்
பெண்கள் அதிலும் குறிப்பாக நடிகைகள் என்றாலே தன் வயதை வெளியில் சொல்ல மாட்டார்கள் என்ற பிம்பம் சமூகத்தில் உள்ளது. ஆனால், தன்னுடைய வயதை வெளிப்படையாக சொன்னதோடு, வயது கூடினால் பெருமைப்பட வேண்டும் என மற்ற பெண்களுக்கு வழிகாட்டியாக பேசினார் ஜோதிகா என்றால் மிகையில்லை.

புதுசா இளசா ரவுசா போவோம்...
மொத்தத்தில் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போது நம் மனதில் இந்த பாடம் வரிகள் தான் ஓடியது. ‘வாடீ ராசாத்தி, புதுசா இளசா ரவுசா போவோம்... வாடீ வாலாட்டி தனியா வரியா புலியா திரிவோம்... ஊரே யாருனு கேட்டாக்கா.. உன் பேர மைக்கு செட்டு போட்டு உறுமிக் காட்டு... காட்டு... காட்டு...'


Click it and Unblock the Notifications











