சூர்யாவின் திட்டத்தை நானும் முடிவு செய்கிறேன்.. ஜோதிகா சொன்ன டாப் சீக்ரெட்
மும்பை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா - ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். இந்தச் சூழலில் சூர்யா குறித்து ஜோதிகா பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் ரசிகர்களும் ஜோதிகா கூறிய விஷயத்தை பார்த்து ஆச்சரியமடைந்திருக்கிறார்கள்.
சூர்யா தமிழின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர். நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமான அவர் இதுவரை 41 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் ரிலீஸானது. படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் அனைத்துமே சமூக பொறுப்பாக இருக்கிறது என்று பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

கங்குவா: எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்துவிட்டு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் கமிட்டானார். முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து இரண்டாவது ஷெட்யூலில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் அப்படத்திலிருந்து விலகினார் சூர்யா. அதனையடுத்து சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார். ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்கிறார்.
மெகா பட்ஜெட்: கங்குவா திரைப்படம் பல மொழிகளில் உருவாகிறது. 3டி தொழில்நுட்பத்திலும் வெளியாகவிருக்கும் படத்தில் திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக அமைந்திருக்கிறது. பீரியட் கால படமாகவும் தற்காலத்தில் நடக்கும் படமாகவும் கங்குவா உருவாகிறது. படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது.
சிறந்த கணவர்: சூர்யாவை பொறுத்தவரை நல்ல நடிகர் என்பதோடு மட்டுமின்றி சிறந்த கணவராகவும் திகழ்கிறார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தபோது ஜோதிகாவுடன் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. திருமணத்துக்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார்.
சூர்யா ஒரு சிறந்த கணவர். தனக்கு எல்லா விதத்திலும் மதிப்பு கொடுக்கிறார். நான் மீண்டும் நடிப்பதற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தவரே சூர்யாதான் என பல மேடைகளில் ஜோதிகா புகழ்ந்திருக்கிறார். ஜோதிகா கடைசியாக சைத்தான் என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தச் சூழலில் சூர்யா குறித்து ஜோதிகா சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஜோதிகா பேட்டி: ஜோதிகா அளித்த அந்தப் பேட்டியில்,"சூர்யாவின் பணிவான நடத்தைக்கு அவரது குடும்பம்தான் காரணம். நாங்கள் இப்போது மும்பையில் இருந்தாலும் இதயத்தால் நான் ஒரு தென்னிந்தியர்தான். பணிவு என்பது நம்மை சுற்றியுள்ளவர்களிடமிருந்தும் வாழ்க்கையின் படிப்பினைகளிலிருந்தும் வருகிறது. சூர்யாவின் குடும்பத்தில் இருந்துதான் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.
பாலிவுட் வேறுபட்டது: தென்னிந்திய திரையுலகம் பாலிவுட்டில் இருந்து வேறுபட்டது. பரஸ்பர மரியாதை, பாராட்டு, நட்பு இருந்தால் வாழ்க்கையை சமநிலைப்படுத்த முடியும். இவை அனைத்தும் ஒரு ஆணிடம் இருந்தால் பெண்களுக்கு பெரிய பாக்கியம்தான். நான் மீண்டும் நடிக்க வந்தபோதும்; மும்பைக்கு சென்றபோதும் சூர்யா ஆதரவாக இருந்தார். என்னுடைய திட்டங்களை நான் முடிவு செய்கிறேன். அதேபோல் சூர்யாவின் திட்டத்தை நானும், அவரும் சேர்ந்தேதான் முடிவு செய்கிறோம். சூர்யா எப்போதுமே நல்ல கதையை தேர்ந்தெடுப்பார். அவரது எல்லா படங்களிலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உண்டு" என்றார்.


Click it and Unblock the Notifications











