Jyothika - ஹீரோயின்களின் நிலை இதுதான்.. ரசிகர்கள் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்கள்.. ஜோதிகா வேதனை
சென்னை: Jyothika (ஜோதிகா) நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
வாலி படத்தின் மூலம் அறிமுகமான ஜோதிகா தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகை என்ற இடத்தில் இருந்தவர். ரஜினி,கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

சூர்யாவுடன் திருமணம்: பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்தபோது சூர்யாவும், ஜோதிகாவும் காதலிக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் சூர்யாவின் வீட்டில் இந்த காதலுக்கு க்ரீன் சிக்னல் விழவில்லை. இதனால் பல வருடங்கள் அவர்கள் காத்திருந்தார்கள். ஒருவழியாக காதலுக்கு சிவகுமார் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த 2006ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
குடும்பம் டூ நடிப்பு: இவர்களுக்கு தேவ் என்ற மகனும் தியா என்ற மகளும் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி குடும்பத்தை கவனிப்பதில் பிஸியாக இருந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதனையடுத்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக காதல் தி கோர் திரைப்படம் வெளியானது.
ஜோதி பேட்டி: இந்நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு ஜோதிகா அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், "பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களுக்காக ரொம்பவே உழைக்கிறேன். கதாநாயகிகள் இந்த ஃபீல்டில் 10 சதவீதம் அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்குமுக்கியத்துவம் உள்ள கதைகளை ரசிகர்களும் விரும்ப வேண்டும்.
தூக்கி பிடிக்காதீர்கள்: பெரிய நடிகர்களை மட்டும் தூக்கி பிடித்தால் கதாநாயகிகள் எப்படி வளர முடியும். புதிய இயக்குநர்கள் மட்டுமே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதுகிறார்கள். பெரிய இயக்குநர்கள் அப்படி செய்வதில்லை. பெரிய ஹீரோக்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் எல்லாம் பெண்களை மையப்படுத்தி படங்கள் எடுக்கப்படுகின்றன.
வருத்தம்: தமிழில் அப்படி இல்லாதது வருத்தமாக இருக்கிறது. குழந்தைகளுக்கு நாங்கள் திட்டமிட்டதால்தான் நடிப்பிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்தேன். சினிமாவை தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கிறது. என்னிடம் வந்து சினிமா முக்கியமா குழந்தைகள் முக்கியமா என்று கேட்டால் குழந்தைகள்தான் முக்கியத்துவம் கொடுப்பேன். என் மீது ரசிகர்களுக்கு பாசம் இருந்தால் தமிழ்நாட்டு மருமகள் என்பார்கள். கோபம் வந்தால் ஹிந்திக்காரி என்பார்கள். ஆனால் கவலைப்படமாட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











