காஜல் அகர்வாலின் மெழுகு சிலை நாளை திறக்கப்படுகிறது.. ரசிகர்களுக்கு வீடியோ மூலம் ரிமைண்டர்!
சென்னை: மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை நாளை திறக்கப்படவுள்ளது.
தென்னிந்திய சினிமா நடிகைகளிலேயே முதன் முறையாக நடிகை காஜல் அகர்வாலுக்குத் தான் இந்த பெருமை கிடைத்திருக்கிறது.
இதுகுறித்த ரிமைண்டர் வீடியோ ஒன்றை தனது ரசிகர்களுக்காக தற்போது பகிர்ந்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

காஜல் அகர்வால்
பாலிவுட்டில் அறிமுகமாகி, டோலிவுட், கோலிவுட் என கலக்கி வருகிறார் நடிகை காஜல் அகர்வால். சூர்யாவுடன் மாற்றான், விஜய்யுடன் துப்பாக்கி, அஜித்துடன் விவேகம் என தமிழ் சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பையும் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டையும் கொடுத்தது.

இந்தியன் 2
உலக நாயகன் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். வயதான பாட்டி கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருவதாகவும், வர்ம கலை, ஸ்டன்ட் காட்சிகள் என பட்டையை கிளப்பி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தென்னிந்தியாவில் முதல் முறை
தென்னிந்திய நடிகைகளில் முதல் முறையாக நடிகை காஜல் அகர்வாலுக்கு மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கும் கவுரவம் கிடைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இது குறித்த அறிவிப்பை காஜல் அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

நாளை திறக்கப்படுகிறது
சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உருவாக்கப்பட்டுள்ள நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை நாளை திறக்கப்படுகிறது. நடிகை காஜல் அகர்வால் நடித்து வரும் மொசக்கல்லு படக்குழு அந்த காட்சியை நேரடியாக படம் பிடிக்க சிங்கப்பூர் சென்றுள்ளது. இந்த படத்தில் நாயகனாக துல்கர் சல்மான் நடிக்கிறார்.
வீடியோ மூலம்
நாளை தனது மெழுகு சிலை திறக்கப்பட உள்ள நிலையில், நடிகை காஜல் அகர்வால், சிங்கப்பூரில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு சின்ன ரிமைண்டர் கொடுத்துள்ளார். பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோருக்கு கிடைத்த கவுரவம் காஜல் அகர்வாலுக்கு கிடைக்கப் போவது தென்னிந்திய ரசிகர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











