ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவேன்.. நல்ல வேடங்கள் வந்தால் நடிப்பேன்!- கனகா
சென்னை: இனி வரும் நாட்களில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவப் போவதாகவும், நல்ல வேடங்கள் வந்தால் நடிக்கவிருப்பதாகவும் நடிகை கனகா கூறியுள்ளார்.
தன் உடல்நிலைப் பற்றிய வதந்திகள், சொந்தப் பிரச்சினைகளிலிருந்து மீண்டு, தனக்கு நெருக்கமான வேலைக்காரி, பூனைகள், பறவைகளுடன் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டார் கனகா.

பேட்டி
தன் எதிர்காலம் குறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "நான் இறந்துவிட்டதாக செய்தி வந்தபோது நான் அதிர்ச்சி ஏதும் அடையவில்லை. காரணம், சாவைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எல்லோருக்கும் ஒருநாள் வரப்போவதுதானே... எனக்கு எல்லாமாக இருந்த என் அம்மா இறந்த போதே மரணத்தின் வலியை நான் அனுபவித்துவிட்டேன்.

தனிமை இல்லை
நான் தனியாக இருப்பது பற்றி பலரும் பேசுகிறார்கள். தனிமை பற்றிய சிந்தனையே எனக்கு வந்தது இல்லை. வீட்டில் பூனைகள், முயல்கள், அணில்கள் வளர்க்கிறேன். அவைகள் என் பக்கத்தில் இருக்கின்றன. இதுபோல் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவலாம் என்ற திட்டமும் இருக்கிறது.

மனநிலை பாதிப்பா?
நான் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வதந்திகள் பரப்பப்படுகின்றன. வீட்டு வாசலில் சாமி படங்கள், தாயத்துக்கள் இருப்பது பற்றியும் பேசுகிறார்கள். யார் சொன்னது நான் தனியாக இருக்கிறேன் என்று... என் விருப்பப்படி வாழ்கிறேன். யார் வாழ்க்கையிலும் நான் குறுக்கிட்டதில்லை.

பேய் பிசாசு நம்பிக்கை இல்லை
வீட்டுக்குள்ளேயே நான் முடங்கிவிடவில்லை. கோவிலுக்குப் போகிறேன். அங்கிருந்து வாங்கி வரும் படங்களை வாசலில் வைத்துள்ளேன். இதைப் பார்த்து எனக்கு பேய், பிசாசில் நம்பிக்கை இருப்பதாக சொல்கிறார்கள். இப்போது எனக்கு பேய் பிசாசு எதிலும் நம்பிக்கை கிடையாது.

மீண்டும் நடிப்பு
மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என்று இருக்கிறேன். நல்ல கேரக்டர்கள் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பது குறித்து முடிவு செய்யவில்லை," என்றார்.


Click it and Unblock the Notifications











