ஆஸ்கர் விருதுகள் எல்லாம் முட்டாள்தனமானவை.. அம்பலப்படுத்தியிருக்கிறோம்.. கங்கனா ரணாவத் காட்டம்
மும்பை: கங்கனா ரணாவத் இந்திய அளவில் புகழ் அடைந்தவர். பல படங்களில் நடித்திருக்கும் அவருக்கென்று ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு புகழ் அடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்திக்கக்கூடியவர் அவர். மக்களவைத் தேர்தலில் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சூழல் இப்படி இருக்க ஆஸ்கர் விருதுகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை அவர் தெரிவித்திருக்கிறார்.
பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கங்கனா ரணாவத். தனது மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசுவது அவரது இயல்பு. இதனால் அவர் ஆதரவையும், எதிர்ப்பையும் சமமாகவே சம்பாதித்திருக்கிறார். 2006ஆம் ஆண்டு திரையுலகில் கேங்ஸ்டர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிய முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார் கங்கனா ரணாவத்.
தமிழில் என்ட்ரி: சூழல் இப்படி இருக்க அவர் தமிழிலும் என்ட்ரி கொடுத்தார். ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானார் கங்கனா. அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. பிறகு பாலிவுட்டில் கவனம் செலுத்திவந்த அவர் தலைவி படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். அந்தப் படமும் காலை வாரியது. அதன் பிறகு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார். ஆனால் அதுவும் அவர் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

ஓபனாக பேசும் கங்கனா: கங்கனா ரணாவத் தனது மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர். மேலும் பாஜகவின் தீவிர ஆதரவாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். அவர் ஓபனாக பேசுவது அவருக்கு எதிராகவே பல சமயங்கள் திரும்பியிருக்கின்றன. டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்து பேசியது என பல முறை சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இதனால் அவர் பலத்த கண்டனங்களையும் சந்தித்திருக்கிறார்.
எம்.பியான கங்கனா ரணாவத்: இதற்கிடையே அவருக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்தது. அதன்படி இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் மண்டி தொகுதியில் போட்டியிட்டார் அவர். தீவிரமாக பரப்புரை மேற்கொண்ட அவர் அப்போதும் சர்ச்சைக்குரிய வகையிலேயே பேசியிருந்தது கவனிக்கத்தக்கது. இருந்தாலும் அவர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எம்.பியான பிறகும் தொடர்ந்து திரைத்துறையில் கவனத்தை செலுத்திவருகிறார்.

எமர்ஜென்சி: சூழல் இப்படி இருக்க கடைசியாக அவர் எமர்ஜென்சி எனும் திரைப்படத்தை தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸானது. ஏகப்பட்ட சிக்கல்களுக்கு பிறகு இந்தப் படம் வெளியானது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக அவருக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும்; படத்தின் ரிசல்ட் அவருக்கு அப்செட்டை கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் ரசிகரின் கருத்துக்கு காட்டமான பதிலடியை அவர் கொடுத்திருக்கிறார்.
என்ன பதிலடி?: அதாவது சமூக வலைதளத்தில் ஒரு ரசிகர்க, எமர்ஜென்சி படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த கங்கனா, "அமெரிக்கா அந்த நாட்டின் உண்மையான முகத்தை எப்போதும் ஒத்துக்கொள்ளாது. அந்த நாடு வளரும் நாடுகளை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள், அடக்குமுறை செய்கிறார்கள் என்று எமர்ஜென்சி திரைப்படத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறோம். அதனால் அவர்களது முட்டாள்த்தனமான ஆஸ்கர் விருதை அவர்களே வைத்துக்கொள்ளட்டும். நமக்கு நம்முடைய தேசிய விருதுகள் இருக்கின்றன" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











