தேர்தலில் 'மொத்திய' மக்கள்.. தோல்வியால் மீண்டும் சினிமாவுக்குத் திரும்பிய 'குத்து' ரம்யா!
பெங்களூர்: கர்நாடகாவின் மாண்டியா தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தீவிர அரசியலில் ஈடுபட்ட ரம்யா, பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த காரணத்தால் தற்போது மீண்டும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
கன்னட திரையுலகில் தனக்கென்று ஒரு தனிஇடத்தை பிடித்து இருப்பவர் நடிகை ரம்யா. இவர் தமிழில் 'குத்து' படத்தில் அறிமுகமானதால் 'குத்து' ரம்யா என்று அழைக்கப்படுகிறார். தொடர்ந்து 'வாரணம் ஆயிரம்', 'பொல்லாதவன்', 'கிரி' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
அரசியலில் ஈடுபட்ட ரம்யா, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மண்டியா லோக்சபா தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இளம் பெண் எம்.பி
லோக்சபாவின் இளம் பெண் எம்.பி. என்ற பெருமையை பெற்ற ரம்யா சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதே மண்டியா தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

கட்சிக்காரர்கள் உள்குத்து
தனது தோல்விக்கு நடிகர் அம்பரீசின் ஆதரவாளர்களே காரணம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். கட்சியினரே உள்குத்து வேலைகளில் ஈடுபட்டு தன்னை தோல்வியடைய செய்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

காலி செய்த ரம்யா
தேர்தலில் தோல்வி அடைந்ததும் மண்டியாவில் தான் வாடகைக்கு குடியிருந்த வீட்டை காலி செய்ததால், பிற கட்சி மட்டுமின்றி தனது கட்சியினர் விமர்சனத்துக்கும் ஆளானார். அதன்பிறகு மண்டியா மாவட்டத்திலேயே தொடர்ந்து இருக்க விரும்புவதாகவும், வீடு கட்டுவதற்கு இடம் தேடுவதாகவும் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சினிமாவுக்கு முழுக்கு
அரசியல் வாசம் செய்த பிறகு, மக்கள் சேவை செய்வதற்கே நேரம் போதுமானதாக இருப்பதால் சினிமாவுக்கு முழுக்கு போடுவதாக ரம்யா ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதனால் அவர் நடித்த படங்கள் பாதியில் நிற்பதாக புகார் எழுந்தது.

புனீத்ராஜ்குமாருடன் நடிப்பு
ஆனால் இப்போது அவர், தனது முடிவினை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிகிறது. ‘தொட்மனே ஹுடுகா' என்ற படத்தில் நடிகர் புனீத்குமாருடன் ரம்யா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் அறிவிப்பு
‘ரம்யாவிடம் ஏற்கனவே பேசி உள்ளேன். அவர் கதையை கேட்டு விட்டு, நடிக்க ஒப்புக் கொண்டு உள்ளார். மற்ற பேச்சுவார்த்தை மட்டும் நடக்கவேண்டி உள்ளது. அதுவும் விரைவில் முடிந்து விடும்' இதுகுறித்து இயக்குனர் சூரி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











