சிம்பு, தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ஜோடி.. கயாடு லோஹருக்கு எங்கேயோ பெரிய மச்சம் இருக்கு!
சென்னை: தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த முன்னணி நடிகைகளுக்கும் பல இளம் நடிகைகளுக்கும் வாய்ப்புகள் அதிகளவில் குறைந்து விட்டன. ரசிகர்களை உற்சாகப்படுத்த புதிய நடிகைகளை அவ்வப்போது கோலிவுட்டில் களமிறக்கி வரும் நிலையில், லேட்டஸ்ட்டாக டிராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தாக்கிய கவர்ச்சி புயல் கயாடு லோஹருக்குத் தான் கோலிவுட்டில் தற்போது அதிக பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
ஒரு பக்கம் மமிதா பைஜு பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் கயாடு லோஹரும் முன்னணி ஹீரோக்களின் படங்களை அடுத்தடுத்து புக் பண்ணி வருகிறார். அதிர்ஷ்ட தேவதையாகவே கோலிவுட் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தற்போது கயாடு லோஹரை பார்த்து வருகின்றனர்.

பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து கயாடு லோஹர் நடித்த முதல் படமான டிராகன் திரைப்படமே 150 கோடி வசூல் செய்த நிலையில், சிம்பு, தனுஷ் படங்களிலும் அவர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திலும் கயாடு லோஹர் தான் ஹீரோயின் என்கின்றனர்.
கலக்கும் கயாடு லோஹர்: அசாம் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த கயாடு லோஹருக்கு 25 வயது தான் ஆகிறது. தமிழ் சினிமாவில் தற்போது அதிகப்படியான முன்னணி ஹீரோக்களின் பார்வையே அந்த நடிகை மீதுதான் என்கின்றனர். பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் லட்டு போல நடித்த நிலையில், அடுத்ததாக அதர்வாவின் இதயம் முரளி படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். மேலும், ஜி.வி. பிரகாஷ் உடன் இம்மார்டல், சிம்புவுடன் எஸ்டிஆர் 49 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் உடனும் ஒரு படத்தில் கயாடு லோஹர் ஜோடியாக நடிக்கப் போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடி: மதராஸி மற்றும் பராசக்தி படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். ஏ.ஆர். முருகதாஸுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மதராஸி படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் செப்டம்பர் 5 வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஏஸ் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த ருக்மினி வசந்த் நடித்து வருகிறார். அடுத்து, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் ஸ்ரீலீலா அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
யாரு இயக்குநர்?: தளபதி விஜய்யின் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோவாக நடிக்க காரணமே வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமானது தான். இருவரும் இணைய வாய்ப்பில்லை என பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், பராசக்தி படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்றும் அந்த படத்தில் தான் கயாடு லோஹர் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்கின்றனர். மேலும், இந்த படம் டைம் டிராவல் கதையாக இருக்கும் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











